]‘மகேந்திரன் துரோகி’: கமல் காட்டம்!

politics

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. கோவை தெற்கில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கமல், அதே தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

இந்த நிலையில், தேர்தலில் சந்தித்த தோல்விக்கான காரணம் மற்றும் கட்சியின் மறுசீரமைப்பு குறித்து கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளின் கூட்டம் நேற்று (மே 6) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களான டாக்டர் ஆர். மகேந்திரன், எம். முருகானந்தம், மௌரியா ஐபிஎஸ் (ஓய்வு), தங்கவேல், உமாதேவி, சி.கே.குமரவேல், சேகர், சுரேஷ் அய்யர் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களைக் கொடுத்திருக்கின்றனர். அப்போது இந்தக் கடிதங்களை ஏற்றுக்கொள்வதும் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதும் கமல்ஹாசனே முடிவு செய்யட்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கட்சியிலிருந்து விலகியது குறித்து துணைத்தலைவர் மகேந்திரன் கூறுகையில், “கட்சியில் ஜனநாயகமே இல்லை. மிகப்பெரிய தோல்விக்குப் பிறகும் கமலின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை. கமல் இனி மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. அவர் நல்ல தலைமைப் பண்பு கொண்டவராக மறுபடியும் செயல்பட வேண்டும். தொண்டர்களின் உற்சாகமும், உத்வேகமும் தான் தேர்தல்களைச் சந்திப்பதற்கான வலிமையை எனக்குக் கொடுத்தது. அரசியல் எனும் விதையை எனக்குள் விதைத்த தலைவர் கமல்ஹாசனுக்கு என் மனமார்ந்த நன்றி” எனக் கூறினார்.

நிர்வாகிகள் ராஜினாமா கடிதம் கொடுத்தது குறித்து ‘களை எடுப்போம்’ என்ற தலைப்பில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெருங்கனவை முன்வைத்து முதலாவது சட்டப்பேரவை தேர்தலைச் சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்பட செயல்பட்டோம். களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதை கண்கூடாக கண்டோம். துரோகிகளைக் களையெடுங்கள் என்பதுதான் எல்லோரது ஒருமித்த குரலாக இருந்தது. அதில் முதலாவதாக களைய வேண்டியவர்தான் டாக்டர் ஆர்.மகேந்திரன்.

கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சில சமயங்களில் தோற்றுப்போகும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இவர்தான். முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக்கொள்ளத் துணிந்தார்.

கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவர்களைத் தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை. நேர்மை இல்லாதவர்களும் திறமை இல்லாதவர்களும் வெளியேற மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தன்னுடைய திறமையின்மையையும் நேர்மையின்மையையும் தோல்வியையும் அடுத்தவர் மீது பழி போட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார்.

தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதை தெரிந்துகொண்டு புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டார். ஒரு களையே தன்னை களையென்று புரிந்துகொண்டு தன்னைத் தானே நீக்கிக் கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான்.

என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை. நான் செய்த தவறுகளை மறைக்கவோ, மறக்கவோ ஒருபோதும் முயன்றது இல்லை. என் சகோதர, சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினர்கள் மனம் தளர வேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை. உங்களின் வீரமும் தியாகமும் ஊர் அறிந்தவை.

தோல்வியின்போது கூடாரத்தைப் பிய்த்துக் கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றமில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *