தமிழ் நாட்டின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற, தமிழ் நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமுதாய மக்களுக்கு 16% இட ஒதுக்கீடு அளித்து மாநில அரசு இயற்றிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் நேற்று (மே 5) ரத்து செய்தது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, தேர்தல் சமயத்தில் தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட 10.5 சதவீத ஒதுக்கீடு குறித்த கேள்விகள் எழுந்தன. இதுகுறித்து மின்னம்பலத்தில் [மராத்தி இட ஒதுக்கீடு தீர்ப்பு: வன்னியர் இட ஒதுக்கீட்டுக்குப் பொருந்துமா?](https://www.minnambalam.com/politics/2021/05/05/38/marathi-reservation-supreme-court-judgement-vanniyar-reservation-impact) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “சமூக நீதியின் தொட்டிலாம் தமிழ் நாட்டின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற, தமிழ் நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறையை பாதுகாக்கத் தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் “மராத்தா’” சமூகத்தினருக்கென்று கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அளிக்கப்பட்ட தனி, உள்ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் நேற்று அளித்திருக்கும் தீர்ப்பின் எதிரொலியாக, தமிழ் நாட்டில் நடைமுறையில் இருக்கும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு என்னவாகுமோ என்ற கவலையும், அச்சமும் தமிழ் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
1993-ல் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் அதற்கென தனியாகச் சட்ட முறையினை நிறைவேற்றி, அதனைச் சட்டமாக்கி, நிறைவேற்றி, மத்திய அரசின் ஒப்புதலோடு அச்சட்டத்திற்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கி, அரசமைப்பு சட்டத் திருத்தம் செய்து, 9ஆவது அட்டவணையில் சேர்த்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா..
அரசியலமைப்புச் சட்டத்தின் 102-ஆவது திருத்தத்தின்படி, மாநில அரசுகள் தங்களுடைய ஆளுமைக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் அரசு வேலை
வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டுக்கான பரிந்துரையை மட்டுமே மத்திய அரசுக்குச் செய்ய முடியும் என்று இப்போது அளிக்கப்படுகின்ற சட்ட விளக்கம் இந்தியாவின் பன்முகத் தன்மையால் வெவ்வேறு விதமாகச் செயல்படுத்தப்பட்டுவரும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் ஆன்மாவைச் சிதைத்துவிடும் என்ற அச்சம் எழுகிறது.
அரசமைப்பு சட்டத் திருத்தம் 102 என்பது மத்திய அரசினால் வழங்கப்படும் வேலைவாய்ப்பு மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்வதற்கு மட்டுமே பொருந்தும். எனவே, அரசமைப்புச் சட்டத்தின் 102-வது திருத்தம், மாநில அரசுகள், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்வது குறித்த அதிகாரத்தைப் பறிக்கவில்லை என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அவர்கள் மிகவும் தெளிவாக உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்காட்டி வாதித்துள்ளார்.
ஏழை, எளிய, உழைக்கும் வர்க்க, சாமானிய மக்கள் கல்வி பெறவும், அரசு வேலைவாய்ப்பு பெறவும், அதன்மூலம் சமூக நீதி நிலைநாட்டப்பட்டு, சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட மக்கள் சமூக நீதிக் கொள்கைகளால் கைதூக்கிவிடப்படவும் இட ஒதுக்கீடு முறை மிகச் சிறந்த வழி என்பதால், தமிழக அரசு உடனடியாக சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று, 69 விழுக்காடு இட ஒதுக்கீடு காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.
**-பிரியா**
�,