திருப்பத்தூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிர் பலியா?

politics

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அரைமணி நேரத்திற்கு ஒருவர் என அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மரணங்கள் ஏற்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நேற்று முன்தினம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் 13 பேர் பலியானதாக செய்தி வெளி வந்த நிலையில், திருப்பத்தூர் மருத்துவமனையிலும் அதே புகார் எழுந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அரசு மருத்துவமனையில் ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நேற்றிரவு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என உறவினர்கள் கூறுகின்றனர். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூர் மருத்துவ அலுவலர் திலீபன் கூறுகையில்,” அரசு மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்சிஜன் உள்ளது. இறந்தவர்கள் அனைவரும் வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.மருத்துவமனையில் இறந்ததாக கூறப்படும் விஷமங்கலம் பகுதியை சேர்ந்த மாது (63) என்பவர் மூளை சம்பந்தமான பிரச்சனை காரணமாகவும், ஆரியப் நகர் பகுதியை சேர்ந்த சாரியா (38) மற்றும் தகர குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர் ஆகிய இருவருக்கும் சிவியர் அக்வேட்ரஸ்பேரிட்டரி இன்பெக்சன் இருந்ததாலும் உயிரிழந்துள்ளனர். சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த சக்திகுமார் (40) என்பவர் நிமோனியா காரணமாக உயிரிழந்தார்” என்று கூறினார்.

இருப்பினும், ஆக்சிஜன் பற்றாக்குறையினால் வடமாநிலங்களில் கொத்து கொத்தாக மக்கள் பலியான சம்பவம் போன்று தமிழகத்திலும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

**வினிதா**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *