அகில இந்த திரைப்பட கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவரும், தமிழ் சினிமாவில் ஐம்பது ஆண்டுகளை கடந்து பயணித்து வரும் மூத்த தயாரிப்பாளருமான கலைப்புலி தாணு தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில்,
அரை நூற்றாண்டுகாலம் பொதுவாழ்வில் கலைஞரின் பாடசாலையில் பயின்று சிறந்த மாணவராக தேர்ச்சி பெற்று கடந்த காலங்களில் கட்சித் தலைமையையோ ஆட்சித் தலைமையையோ கேட்டு பெறாமல் கலைஞர் ஆசியுடன் மக்கள் தந்த மாநகர மேயர், துணை முதல்வர், உள்ளாட்சியில் நல்லாட்சியை தந்து ஏற்ற பொறுப்புகளிலெல்லாம் மிகச்சிறப்பான நிர்வாகம் தந்து ஒட்டுமொத்த தமிழகத்தின் பாராட்டை பெற்றீர்கள்.
மீண்டும் ஆட்சியை பிடிக்க கடந்த 10 ஆண்டுகளாகநமக்குநாமே, ஒன்றிணைவோம் வா”திட்டங்கள் மூலம் நம் தாய்மண்ணில் உங்கள் பாதங்கள் தடம்பதிக்காத இடங்களே இல்லை எனும் அளவில் பயணம் செய்து மக்களின் மனங்களை வசப்படுத்தி அதீத அன்பால் சாத்தியப்படுத்திவிட்டீர்கள். மாநிலம் தழுவிய கிராமசபை கூட்டங்களை நடத்தி மக்களிடம் மனுக்களை பெற்று அதன் தீர்வுக்காக தனி அமைச்சகமும் உயர் அதிகாரிகளை நியமிக்க இருப்பதை காண உலகமே உங்களை உற்று நோக்கி காத்திருக்கிறது.
கலைஞருக்கு பிறகு கழகத்துக்கு தலைமை ஏற்று கட்சியை கட்டமைத்து ஒருங்கிணைத்து திறம்பட நடத்தி பெருந்தொற்று காலத்திலும் மேற்கொண்ட பயணங்களால் தமிழக மக்கள் மகத்தான வெற்றியை தந்திருக்கிறார்கள். கலைஞரைப் போன்று கலைத்துறையிலும் தனிக் கவனம் செலுத்தி அந்தத் துறையை மிகச்சிறப்பாக செயல்பட வழிவகுத்துத் தாருங்கள்.
கூட்டணி அமைப்பதிலும் கட்சித் தலைவர்களை சந்திக்கும்போதும் கருத்து பரிமாற்றங்கள் நிகழும்போதும் கடுஞ்சொற்கள் பயன்படுத்தியதாக யாரிடமிருந்தும் எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை. இதுவே உங்கள் ஆளுமையின் ஆழத்தை மிக அழகாக அற்புதமாக அரங்கேற்றி வருகிறது. தமிழக மக்களின் உணர்வுகளை நெடிய பயணத்தில் கண்ட நீங்கள் ஆட்சிப்பணிகளில் மூத்த அதிகாரிகளின் துறைசார்ந்த நிர்ணயத்துவத்தை பயன்படுத்தி உங்கள் தலைமை சிறக்க கடந்தகாலத்தில் நீங்கள் செயல்பட்டதை அறிந்தவர்கள் இன்றும் பாராட்டி மகிழ்கின்றனர்.
உங்களின் கடின உழைப்பு மனங்கவரும் வியூகங்கள் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மையும் கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மையையும் பெற்று தமிழக மக்களின் லட்சிய பிம்பமாக தமிழக இளைஞர்களின் சுடரொளியாக வெளிச்சம் பாய்ச்சி கலைஞரின் பொற்கால தமிழகத்தை மீட்டெடுத்து வருங்கால தலைமுறைக்கான தலைவரென முத்திரை பதிக்க வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
**-ராமானுஜம்**
.�,”