தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கக் கூடும் என சென்னை சிறப்பு அதிகாரி சித்திக் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லவன் சாலையில் உள்ள 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா பரிசோதனை செய்யும் மையத்தை, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு மேற்பார்வை அலுவலரும், வணிக வரித்துறை முதன்மை செயலாளருமான சித்திக் ஆகியோர் ஆய்வு செய்தனர். இவர்களுடன் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபுவும் உடன் இருந்தார்.
இதையடுத்து இவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சிறப்பு அதிகாரி சித்திக், “ஓமந்தூரார், ராஜீவ் காந்தி இருமருத்துவமனைகளும் இணைந்து பல்லவன் சாலை பரிசோதனை மையத்தை உருவாக்கி உள்ளனர்.மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளில் கொரோனா தொற்று அறிகுறியுடைய, அவசர சிகிச்சை தேவைப்படாத நோயாளிகளை பரிசோதனைக்காக இங்கு அனுப்பி வைப்பர். வாரத்தின் ஏழு நாட்களிலும் 24 மணி நேரம் செயல்படும் இந்த மையத்தில் ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள இயலும். ஏற்கனவே சென்னையில் 14 பரிசோதனை மையம் உள்ள நிலையில், மேலும் பல்லவன் சாலையையும் சேர்த்து 7 பரிசோதனை மையத்தை உருவாக்க உள்ளோம். வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என்பதால் இது போன்ற கூடுதல் பரிசோதனை நிலையங்களை ஏற்படுத்துகிறோம்.
280ஆக இருந்த ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 350ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 14 பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. தொற்று பாதித்தவர்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தினர் வீடுகளில் தனிமையில் இருக்கின்றனர்” என தெரிவித்தார்
இதையடுத்து பேசிய ஆணையர், “சென்னையில் தற்போது 619 முன்கள பணியாளர்கள் சிகிச்சையில் உள்ளனர். 90 சதவிகித முன்கள பணியாளர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். 150 ஊடகவியலாளர்களுக்கு பரிசோதனை செய்ததில், ஒருவருக்கு மட்டுமே கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர முடியும்.
மாநகராட்சி பதிவேட்டின்படி, 26 முன்கள பணியாளர்கள் முதல் அலையிலும், காவல் துறையில் 3 நபர்கள் இரண்டாம் அலையிலும் உயிரிழந்துள்ளனர். நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு, குறைவான அளவில் முகவர்களை அனுப்புமாறு அரசியல் கட்சியின் வேட்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தோம். அதை ஏற்று பல சுயேட்சை வேட்பாளர்கள் முகவர்களை அனுப்பவில்லை. குறைந்தபட்சம் தி.நகரில் 14 மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை முடியும். கொளத்தூரில் முடிவுகள் வெளிவர 20 மணி நேரம் வரை ஆகலாம். அதை குறைக்க முயற்சி எடுப்போம். ஏறக்குறைய 6000 வாக்குச் சாவடி மையங்கள் சென்னையில் இருக்கின்றன.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதை மீறினால் முதலில் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும், அடுத்து தொடர்ந்தால், கொரோனா பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு வந்து சேர்க்கப்படுவார்கள்எனத் தெரிவித்தார்.
இறுதியாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு பேசுகையில், அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் இருப்பு இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே தட்டுப்பாடு உள்ளது. அவசர சிகிச்சையில் இருப்போருக்கு மட்டுமே அது தேவைப்படும்” என தெரிவித்தார்.
**வினிதா**
.�,”