கொரோனா தொற்று காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
நாளை தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருகின்றது. இன்று காலை 5 மாநில சட்டமன்ற தலைமை தேர்தல் அதிகாரிகள், இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர். அதில், நாளை நடைபெறவிருக்கும் வாக்கு எண்ணிக்கையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது
இந்நிலையில், தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ” 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 3,30,380 தபால் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், இந்தாண்டில் அதிகபட்சமாக நேற்று வரை 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அரசு ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகளை தவிர மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்குகள் செலுத்தியதால், தபால் வாக்குகள் அதிகரித்துள்ளது.
நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை பணியில் 35 ஆயிரத்து 836 அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். 6 தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், புதிதாக 6 தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். இடைப்பட்ட நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும். முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும்.
வேட்பாளர்கள், முகவர்கள் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்” என தெரிவித்தார்.
**வினிதா**
.�,