Oஇன்று எக்சிட் போல் முடிவுகள்!

politics

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக்கணிப்பான, ‘எக்சிட் போல்’ இன்று (ஏப்ரல் 29) இரவு 7.30 மணிக்கு வெளியாகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி, அஸ்ஸாம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் எட்டாம்கட்ட (இறுதிக்கட்ட) தேர்தல் இன்று (ஏப்ரல் 29) நடக்கிறது. அனைத்து மாநிலங்களின் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடக்கிறது.

மேற்கு வங்காளத்தின் இறுதிக்கட்டத் தேர்தல் இன்று மாலை 6.30 மணியோடு நிறைவடையும் நிலையில் ஒருமணி நேரத்துக்குப் பின் 7.30 மணிக்கு எக்சிட் போல் ரிப்போர்ட்டுகளை வெளியிடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஒரு மாநிலத்தின் எக்சிட் போல் முடிவுகள் பிற மாநிலத் தேர்தல் மீது தாக்கம் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக எக்சிட் போல் கட்டுப்பாடுகளை நிர்ணயித்தது தேர்தல் ஆணையம்.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் நடந்தத் தேர்தலில் எக்சிட் போல் முடிவுகளை பிரபல செய்தி நிறுவனங்கள் இன்று வெளியிட இருக்கின்றன. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடையும், திமுக கூட்டணி அல்லாத மற்ற கட்சிகள் 50 இடங்களுக்கும் குறைவாகவே பெறும் என்று திமுகவுக்கான தேர்தல் ஆலோசகராகப் பணியாற்றிய ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதிமுகவோ, கடந்த 2016 தேர்தலிலும் இப்படித்தான் எக்சிட் போல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக இருந்தன. ஆனால் மக்கள் முடிவுகள் வேறு மாதிரி இருந்தன என்கிறார்கள்.

**2016 எக்சிட் போல் முடிவுகளும் மக்கள் முடிவுகளும்!**

2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட எக்சிட் போல் முடிவுகளில் பல முரண்பாடுகளாகவே போயின.

நியூஸ் நேஷன் நிறுவனம் வெளியிட்ட எக்சிட் போல் முடிவில் அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக 95-99 இடங்களில் வெல்லும் என்றும், திமுக 114-118 இடங்களில் வெல்லும் என்றும் கூறியிருந்தது.

இந்தியா டுடே – ஆக்சிஸ் எக்சிட் போல் முடிவில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு 132 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக 99 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டது.

சி ஓட்டர்ஸ் நிறுவனம் நடத்திய எக்சிட் போல் முடிவில் அதிமுக 139 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்கவைக்குமென்றும், திமுக கூட்டணி 78 வரை வரும் என்று கூறப்பட்டது.

நியூஸ் எக்ஸ் திமுக 140 இடங்கள், அதிமுக 90 இடங்கள் என எக்சிட் போல் முடிவுகளை வெளியிட்டிருந்தது.

ஏபிபி – நெல்சன் நிறுவனம் எக்சிட் போல் முடிவில் திமுக 132 இடங்களிலும், அதிமுக 95 இடங்களிலும் வெல்லும் என்று குறிப்பிட்டது.

இத்தனை எக்சிட் போல் முடிவுகளில் சி ஓட்டர்ஸ் மட்டுமே அதிமுகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று 2016இல் கூறியது. மற்ற நிறுவனங்களின் எக்சிட் போல் கணிப்புகள் எல்லாம் பொய்த்து, சி ஓட்டர்ஸ் நிறுவனத்தின் கணிப்பே மக்கள் முடிவோடு ஒத்துப்போனது.

இந்த நிலையில் 2021 எக்சிட் போல் முடிவுகளையும் வெளியிட தயாராகிவிட்டன செய்தி நிறுவனங்கள்.

தமிழகம் மட்டுமல்ல அஸ்ஸாம், மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி என்று தேர்தல் நடந்த அனைத்து மாநிலங்களுக்குமான எக்சிட் போல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள மக்களும், அரசியல் கட்சி தலைமைகளும் ஆர்வமாகவே இருக்கிறார்கள்.

மே 2ஆம் தேதிதான் மகேசன் முடிவு என்றாலும், இந்த எக்சிட் போல் எனப்படும் பூசாரிகளின் முடிவுகளுக்கும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *