தமிழகத்தில், 45 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி 16ஆம் தேதி முதல் ஒவ்வொரு கட்டமாக மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காகப் பல்வேறு விழிப்புணர்வுகளையும், தடுப்பூசி மையங்களையும் ஏற்படுத்தி வருகிறது அரசு. முக்கியமாக, மக்களிடையே நேரிடையாக தொடர்புவைத்திருக்கும் அரசு ஊழியர்கள், அலுவலர்களுக்குத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்று வந்தாலும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி முறையில் தொடர்ந்து பள்ளிக்கு வந்து மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளைக் கவனித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், கொரோனா தடுப்புப்பணிகளில் தன்னார்வ அடிப்படையில் பல ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பள்ளிக்கல்வி இயக்குநரகம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, 45 வயதுக்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதுகுறித்த விவர அறிக்கையை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும் கொரோனா தடுப்பு தொடர்பான பணிகளில் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கல்வி அதிகாரிகள் இணைந்து பணிபுரிய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**வினிதா**
.�,