சென்னையில் 3,609 போலீசார்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. முழு ஊரடங்கை முன்னிட்டு சென்னை பெருநகரில், காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து, அண்ணாநகரில் உள்ள அண்ணா ஆர்ச் பகுதியில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னையில் 200 இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 7,000 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உரிய ஆவணங்கள் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. விதிகளை மீறி வெளியே சுற்றியவர்களிடம் இருந்து 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் மட்டும் இதுவரை, 3,609 போலீசார்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,338 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 258 பேர் மட்டும் சிகிச்சையில் இருக்கின்றனர். இதில், சிலர் மருத்துவமனைகளிலும், சிலர் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் உள்ள 23 ஆயிரம் காவலர்களில் 16 ஆயிரம் போலீசார்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் இதுவரை 13 போலீசார்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா முதல் அலையில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலையில் உயிரிழந்த 4 போலீசார்களுக்கு நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
**வினிதா**
.�,