தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு 104 என்ற எண்ணைத் தொடர்புக் கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், முன்புபோல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கமளிக்க ஏற்கெனவே சுகாதாரத்துறை பல தொடர்பு எண்களை அளித்துள்ளது. இதுதவிர மாநகராட்சி சார்பில் 4 தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவசர கால கட்டுப்பாட்டு மையம் செயல்முறைக்கு கொண்டுவரப்பட்டு உதவி எண்கள் அளிக்கப்பட்டுள்ளது. எந்த மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் உள்ளது என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக ’ஸ்டாப் கொரோனா’ என்ற இணையதளத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அரசு வெளியிட்டது.
பல மாநிலங்களில் தற்போதைய முக்கிய பிரச்சினையாக இருப்பது ஆக்சிஜன் பற்றாக்குறை. இந்நிலையில், தமிழக அரசு ஆக்சிஜன் சப்ளை தொடர்பான சிக்கலை தீர்க்க 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கால் சென்டரை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் போன்ற கொரோனா சிகிச்சை அளிக்கும் இடங்களில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், மாநிலத்திலுள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதன் உற்பத்தியை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
ஆக்சிஜனை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் விரைவாக மருத்துவமனைகளை வந்தடைய தேவைப்படும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அத்தகைய மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் ஏற்படும் மருத்துவ ஆக்சிஜன் வழங்கல் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் தேவைப்படும் மருத்துவமனைகள், 24 மணி நேரமும், 104 என்ற அவசர எண்ணிற்கு அழைக்கலாம் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**வினிதா**
.�,