முன்பு போலவே, கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் ரூ.150க்கு கொள்முதல் செய்யப்பட்டு மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, இதுவரை இல்லாத அளவு சுமார் 3.5 லட்சம் பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இப்போது கிட்டத்தட்ட 2.3 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவல் ஒருபக்கம், தடுப்பூசி பற்றாக்குறை ஒரு பக்கம் என மத்திய , மாநில அரசுகளுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சீரம் நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசி விலையை மாநில அரசுகளுக்கு 400 ரூபாய் என்ற அளவிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என்ற அளவிலும் விலை நிர்ணயித்தது.
இந்த விலை நிர்ணயத்துக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஏற்கனவே கொரோனா முடக்கத்தால் நிதிசுமையில் இருக்கும் மாநில அரசுகளுக்கு, தடுப்பூசி விலையேற்றம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. இருப்பினும், தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறிவித்தது.
இந்நிலையில்,மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(ஏப்ரல் 24) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ தடுப்பூசி விவகாரத்தில் மாநில அரசுகளின் கோரிக்கைகள் ஏற்றுகொள்ளப்பட்டது. இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளையும் மத்திய அரசு ரூபாய் 150க்கு கொள்முதல் செய்து, அவை மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**வினிதா**
.�,