கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை உயர்த்தி இந்திய சீரம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி மாநில அரசுகளுக்கு இந்த தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.400 என்ற விலைக்கும், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.600 என்ற விலைக்கும் வழங்கப்படும்.
கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை 250 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம், மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் விலை 400 ரூபாயாகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாயாகவும் உயர்த்தியது. இந்த விலை உயர்வு தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு இன்னும் சில நூறு ரூபாய்கள் கூடுதலாகவே சென்று சேர்கிறது.
தடுப்பூசிகளின் விலை உயர்வை கண்டித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில், “நாட்டில் நெருக்கடி நிலவுகிறது. ஆனால் மோடியின் நண்பர்களுக்கு இது அதிர்ஷ்டமாகவும், மாநிலங்களுக்கு துரதிர்ஷ்டமாகவும் ஆகி இருக்கிறது” என சாடி உள்ளார்
இந்தப் பின்னணியில் தடுப்பூசிகளுக்கு பாரபட்சமான விலைகளை நிர்ணயிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசு தனது பொறுப்பை கைவிட்டு, பெருநிறுவனங்களின் இலாபத்திற்கு சரணடைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் சிதம்பரம்.
தனது ட்விட்டர் பக்கத்தில், தடுப்பூசிகளுக்கு பல விலைகளை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு பாரபட்சமானது மற்றும் பிற்போக்குத்தனமானது. மாநிலங்கள் இந்த முடிவை ஒருமனதாக நிராகரிக்க வேண்டும். மாநில அரசுகள் இணைந்து விலை நிர்ணயம் செய்வதற்கான பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்து, தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பேசி ஒரே மாதிரியான விலையை நிர்ணயிக்க பேச வேண்டும். மாநில அரசுகளின் கூட்டாக வாங்கும் முடிவுதான் உற்பத்தியாளர்களை சீரான விலைக்கு ஒப்புக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தும்.
மத்திய அரசு தனது பொறுப்பை கைவிட்டு பெருநிறுவன இலாபத்திற்கு சரணடைந்து விட்ட நிலையில், மாநிலங்கள் இந்த முன்முயற்சியை எடுக்க வேண்டும்” என்று ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
**வேந்தன்**
�,”