தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தேர்தல் வாக்குறுதிகளில், ‘நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என இரு கட்சிகளும் உறுதி அளித்திருந்தன.
இந்நிலையில் இன்று அனைத்து மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில், மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அப்போது தமிழக அரசு சார்பில் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று தமிழகத்தில் ஏற்கனவே செயல்படுத்தி வரும் இட ஒதுக்கீட்டைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம் என்றும் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வு தொடர்பான தமிழகத்தின் நிலைப்பாட்டை விரைவில் எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 11 மணிக்குத் தொடங்கி இரண்டு மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், நீட் தேர்வு தொடர்பாகவும், மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்தும் , அந்தந்த மாநில அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்திருக்கிறார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.
**-பிரியா**
�,