திருநெல்வேலி மாவட்டத்தில் வனப்பகுதியில் 25 கி.மீ. நடந்து வந்து காணி இன மக்கள் வாக்களித்தனர்.
500மீட்டர் அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடந்து சென்று வாக்களிக்க யோசிக்கும் வாக்காளர்கள் இருக்கும் நிலையில், அம்பாசமுத்திரம் சட்டசபைத் தொகுதியில் பாபநாசம் வனப்பகுதியில் உள்ள இஞ்சிக்குழி கிராமத்தில் வசிக்கும் காணியின மக்கள் 25 கி.மீ. தூரம் வனப்பகுதியில் நடந்து வந்து வாக்கு செலுத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட பாபநாசம் அணை பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 435 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்குச்சாவடியில் சேர்வலாறு பகுதியில் வசிக்கும் மின்வாரிய ஊழியர்கள், காணி இனமக்கள், அகஸ்தியர் காணிக் குடியிருப்பு, சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரான காணி இனமக்கள் வாக்கு செலுத்துவர்.
இவர்களில் இஞ்சிக்குழி கிராமத்தில் வசிக்கும் 8 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதற்காக சுமார் 25 கி.மீ. தூரம் வனப்பகுதியில் நடந்து வந்து ஓட்டுப் போட்டுச் சென்றனர்.
இது குறித்து இஞ்சிக்குழி வாக்காளர்கள் கூறியபோது, இஞ்சிக்குழி கிராமத்தில் 21 வாக்காளர்கள் உள்ளோம். ஒவ்வொரு தேர்தலுக்கும் நாங்கள் வாக்கு செலுத்துவதற்காக 25 கி.மீ. தூரம் வனப்பகுதியில் நடந்து வந்து வாக்கு செலுத்தி வருகிறோம். எங்களில் 3 பேர் சுழற்சி முறையில் கிராம காவலுக்கு இருந்து கொண்டு மீதமுள்ளவர்கள் அனைவரும் வந்து வாக்களித்துச் செல்வோம். நடந்து வருவதற்கு 5 மணி நேரம் ஆகும். எனவே நேற்று இரவு சின்னமயிலாறு வந்து உறவினர்கள் வீட்டில் தங்கி இன்று காலை வாக்கு செலுத்தினோம் என்றனர்.
**-பிரியா**
�,