தேர்தல் விதிமீறல் புகாரில் கோவை, திருச்சி மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில், கே.சி.வீரமணியும், திமுக சார்பில் தேவராஜூம் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதி தேர்தல் செலவினப் பார்வையாளர் விஜய் பஹதூர் வர்மா, ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரை சோதனையிட்டபோது, அதிமுக சின்னம் பொறித்த 39 டி-ஷர்ட்டுகள், அதிமுக கரை வேட்டி, 40 சிறிய துண்டுகள், பாமக சின்னம் பொறித்த 15 துண்டுகள், அதிமுக சின்னம் பொறித்த 55 விசிறிகள், 350 துண்டுப் பிரசுரங்கள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தேர்தல் பறக்கும் படையினருக்கு தேர்தல் செலவினப் பார்வையாளர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில், அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணி உட்பட அவரது ஆதரவாளர்கள் மீது தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமரன் புகார் அளித்தார்.
இதையடுத்து, ஜோலார்பேட்டை தொகுதி அதிமுக தேர்தல் பொறுப்பாளர் அழகிரி, கார் ஓட்டுநர், கார் உரிமையாளர், பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் என 4 பேர் மீது ஜோலார்பேட்டை காவல் துறையினர் கடந்த 26 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்
இதில், அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என செலவினப் பார்வையாளர் விஜய் பஹதூர் வர்மா கேள்வி எழுப்பியபோது, திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலால்தான் கே.சி.வீரமணி மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கூறப்பட்டது.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்த பிறகு, அமைச்சர் வீரமணி மீது வழக்குபதிவு செய்யபட்டது.
உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர் வீரமணிக்கு ஆதரவாகச் செயல்பட்ட திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
இதற்கான உத்தரவு திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது.
**வினிதா**
�,