இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட வானதி சீனிவாசனுடன் விவாதிக்க எங்கள் மாணவர் அணியினர் போதும் என்று மக்கள் நீதி மய்யம் பதிலடி கொடுத்துள்ளது
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். பாஜக தரப்பில் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.
வானதியை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று முன்தினம் கோவை தெற்கு தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுடன், மக்களுடைய பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், ஆட்சி நிர்வாகம், திட்டங்கள் தொடர்பாக விவாதம் செய்யத் தயாரா” என கமலுக்குச் சவால் விடுத்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருக்கிறது.
மநீம கொள்கைப்பரப்பு பொதுச் செயலாளர் சி.கே.குமாரவேல் வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், எங்கள் தலைவரை வானதி சீனிவாசனுடன் விவாதிக்க அழைக்கிறார் பாஜக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. முதலில் மோடி மற்றும் அமைச்சர்களுடன் விவாதத்திற்கு ஏற்பாடு செய்யட்டும். பிறகு வானதி சீனிவாசன் போன்றவர்களுடன் விவாதிக்கலாம். இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட வானதி சீனிவாசனுடன் விவாதிக்க எங்கள் மாணவர் அணியினர் போதும்” என்று அதில் காட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-இராமானுஜம்**
�,”