தமிழக முதல்வர் பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை காட்டுமன்னார் கோயிலில் நேற்று முன்தினம் (மார்ச் 18) தொடங்கி சிதம்பரத்தில் நிறைவு செய்து இரவில் அங்கேயே தங்கினார்.
சிதம்பரம் நகருக்குத் தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்த அவருக்கு, நடராஜர் கோயில் பொது தீட்சிதர் பிரசாதம் மற்றும் நடராஜர் திரு உருவப்படத்தை வழங்கினர்.
நேற்று காலை, சிதம்பரம் நடராஜர் கோயிலில் எடப்பாடி பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு பட்டாடை, மாலை, நடராஜர் தூக்கிய திருவடியில் சாத்தப்படும் குஞ்சிதபாதம் உள்ளிட்ட அருட்பிரசாதத்தினை சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் வழங்கினர்.
நேற்று காலையில் புவனகிரியில் வேட்பாளர் அருண்மொழித் தேவனை ஆதரித்தும், குறிஞ்சிப் பாடியில் வேட்பாளர் செல்வி ராமஜெயத்தை ஆதரித்தும் பரப்புரையில் ஈடுபட்டார் முதல்வர். பின்னர் கடலூரில் வேட்பாளரான அமைச்சர் எம். சி.சம்பத்தை ஆதரித்து பிரசாரம் செய்து பேசியதாவது,
“இந்தத் தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல். இதில் தர்மம்தான் வெல்லும். தர்மம், நீதி ஆகியவை அதிமுகவிடம் உள்ளது. எனவே, அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். ஸ்டாலின் தனது கூட்டங்களில் நாட்டு மக்கள் குறித்துப் பேசுவதும் இல்லை, சிந்திப்பதும் இல்லை. ஒவ்வொரு மக்களும் அரசியல் கட்சியினர் என்ன செய்வார்கள் என்று எதிர்பார்க்கையில் ஸ்டாலின் அரசையும் என்னையும் குறை மட்டுமே கூறி வருகிறார். அதிமுக ஆட்சியில் ஜாதி, மதக் கலவரங்கள் ஏற்படவில்லை.
தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் அதிகரிக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஸ்டாலின் தான் சென்ற இடங்களில் எல்லாம் அருகிலேயே ஒரு பெட்டியை வைத்துக்கொள்கிறார். பெட்டி வாங்குவது அவரது பழக்க தோஷம் என்பதால் அதனை வைத்திருக்கிறார். அதில் பொதுமக்கள் போடும் மனுக்களுக்கு ஆட்சி அமைந்த பின்னர் நூறு நாட்களில் தீர்வு காணப்படும் என்று கூறுகிறார்.
ஆனால், அவர் அந்த பெட்டியைத் திறக்கப்போவதே இல்லை. ஏனெனில் அவர் முதல்வராக வர வாய்ப்பே இல்லை. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால் திமுகவினர் பசியில் உள்ளனர். எனவே மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பன்ருட்டி நெய்வேலி விருத்தாசலம் தொகுதிகளில் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார் முதல்வர் எடப்பாடி.
**சக்தி பரமசிவன்**
�,”