சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வித்தியாசமாகவும், வினோத முறையிலும் வேட்புமனு தாக்கல் செய்வதைக் காண முடிகிறது.
அந்தவகையில் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் சின்னம்மாள் தெர்மாகோலுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் சின்னம்மா என்பவர் முதன்முறையாகக் களம் காண்கிறார்.
இவருக்கு வாக்களிக்க ஆதரவு கேட்டு இன்று மதியம் திமுக தலைவர் ஸ்டாலின் மதுரையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த சூழலில் இன்று மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய திமுக தொண்டர்கள் புடைசூழ வந்தார் சின்னம்மாள். அப்போது அவர் உட்பட பலரும் கையில் தெர்மாகோல் வைத்திருந்தனர்.
அதில், ’தெர்மாகோல் ரூ.10 லட்சம் ப்பே.. ஊழல்வாதிகளை விரட்டியடிப்போம், ஆதிக்க வாதிகளையும் அடிமைகளையும் வீழ்த்துவோம்’ உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அமைச்சர் செல்லூர்ராஜூவை கிண்டலடிக்கும் விதமாக இச்சம்பவம் அமைந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
**-பிரியா**
�,