நடைபெறக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் பாமகவில் போட்டியிட சீட் கிடைக்காத நிர்வாகிகள் பலர் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக தங்கள் ஆதரவாள்ர்களிடம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டது. பாமக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இதில் சீட் கிடைக்காத பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட எதிர்பார்த்த வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளர் வைத்திக்கு சீட் கிடைக்கவில்லை. மாறாக வழக்கறிஞர் பாலுவுக்கு சீட் கொடுத்திருப்பதால், அதிருப்தியான வைத்தி அரசியலை விட்டே ஒதுங்கும் முடிவெடுத்திருந்தார்.
ஜெயங்கொண்டம், குன்னம் தொகுதியில் வைத்திக்கு செல்வாக்கு இருப்பதால் அவரது முடிவால் பாமகவின் வெற்றி பாதிக்கப்படும் என்று அன்புமணிக்கு சொல்லப்பட்டது. இதையடுத்து வைத்தியைத் தொடர்புகொண்ட அன்புமணி, ஆறுதல் கூறியவர் , “உங்களுக்கு அடுத்த வாய்ப்புகள் உண்டு, பாலுவை வெற்றிபெறச் செய்யுங்கள்” என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.
அதேபோல் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி தொகுதியில் ஜெகனுக்கு சீட் கொடுத்ததால் அதிருப்தியாக இருக்கிறார் சமுட்டிக்குப்பம் ஆறுமுகம், “நெருக்கடியான நேரத்தில் பாமகவை கடலூர் மாவட்டத்தில் நிலை நிறுத்த வெட்டுப்பட்டு உயிர் தப்பினேன். எனக்கு சீட் கொடுக்கவில்லை”என்று தனது ஆதரவாளர்களிடம் கூறியவர் தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்கவும் செய்தார். விவரம் அறிந்து அவரையும் தொடர்புகொண்ட அன்புமணி, “உங்கள் கஷ்டம் எல்லாம் எங்களுக்குத் தெரியும், தலைமை அறிவித்த வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டியது உங்க கடமை” என்று பேசியிருக்கிறார். ஆனாலும் ஆறுமுகம் அமைதி காத்துவருவதாகச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
பாமகவின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அசோக்குமார் புவனகிரி தொகுதி எப்படியாவது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தனக்காக தயார் செய்து வைத்திருந்தார். ஆனால் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் புவனகிரி இடம்பெறவே இல்லை. இந்நிலையில் அவரும் அதிருப்தியில் இருப்பதாக அறிந்து அவருக்கும் போன் போட்டு பேசியிருக்கிறார் அன்புமணி.
இப்படி சீட் கிடைக்காதவர்கள், தொகுதி கிடைக்காதவர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்களிடம் போன் மூலம் பேசும் அன்புமணி, ‘இந்தத் தேர்தலில் நம் பலத்தை நிரூபிக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து உழைக்க வேண்டும்” என்று பொறுமையாகப் பேசி அவர்களை களத்துக்குக் கொண்டுவரும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
**-வணங்காமுடி**�,