ஆணவ படுகொலையை தடுக்க சட்டம், மதுவிலக்கு, நீட் ரத்து: காங்கிரஸ் வாக்குறுதி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை சத்யமூர்த்திபவனில் தேர்தல் அறிக்கையைக் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (மார்ச் 16) வெளியிட்டார்.
அதில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கண்ட கனவின் படி உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டொன்றுக்கு , 12 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ள சிறந்த 500 இளைஞர்கள் இளம் பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உணவு மற்றும் உறைவிடம் வழங்கி மூன்று ஆண்டுகளுக்குக் குடிமைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குப் பயிற்சி வழங்கி அவர்களை பணியில் அமர்த்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து தொழில் தொடங்க விரும்புவோருக்கு நிலம் மின்சாரம் போன்ற தொழில் ஆதார தேவைகளுக்கான விலையில் சலுகை கட்டணத்தில் மானியமும் வழங்கப்படும்.
அதிமுகவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒப்பந்ததாரர்கள் கூட்டணி அமைத்து ஒப்பந்தங்களைத் தொகுப்பதற்கு வழி வகுத்த விதிகள் மாற்றியமைக்கப்படும்.
புதிதாகத் தொழில் முதலீடு செய்கிற முனைவோருக்குக் குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரிவிலக்கு அளிக்கப்படும்.
பண மதிப்பழிப்பு, குளறுபடியான ஜிஎஸ்டி மற்றும் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு குறு நுண் தொழில்முனைவோர் வங்கிகளில் பெற்ற கடனுக்காக 50 சதவிகிதத்தைத் தமிழக அரசு மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மீண்டும் சட்டமன்ற மேலவை கொண்டுவரப்படும்.
தமிழகத்தில் புதிய அரசு அமைந்ததும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெண்களுக்குச் சம வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்குப் பதிலாகத் தமிழகத்தில் விவசாயிகளைப் பாதுகாக்கும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்.
காவிரி நீர் மேலாண்மை வாரியத்தையும் ஒழுங்காற்று குழுவையும் தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தக் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கும்.
நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 7.5 சதவிகித ஒதுக்கீட்டை 10 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
முதியோர் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படுவதோடு அதனை அஞ்சல் துறை மூலம் நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் மின் தேவையைக் கணக்கிட்டு அதற்கு ஏற்றார் போல் புதிய மின் திட்டங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் ஆணவ படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டங்கள் கொண்டு வரப்படும்.
மாதம் ஒருமுறை விசைத்தறியாளர்களுக்கு மின் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருநங்கைகளுக்கான நல் வாழ்வை உறுதிப்படுத்த உச்சநீதிமன்ற உத்தரவின்படி சீர்திருத்தங்கள் செய்யப்படும்.
பணியின் போது பாதிக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கும் உரிய நிவாரணமும் பணியின்போது இறக்க நேரிடும் பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதியும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
-பிரியா