Cகமல் கார் மீது தாக்குதல்!

politics

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு திரும்புகையில் அவரது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார். தேர்தலை முன்னிட்டு நேற்று மாலை காஞ்சிபுரம் பெரியார் நினைவு தூண் அருகே பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பரப்புரை ஆற்றினார்.

இரவு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ஹோட்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். கார் காந்தி சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் கமலின் கார் மீது தாக்கியுள்ளார். இதில் காரின் ஒரு பக்கக் கண்ணாடி உடைந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கட்சித் தொண்டர்கள் அந்த நபரை பிடித்து சரமாரியாகத் தாக்கினர். இதில் அவருக்கு மூக்கு வாய் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் அந்த நபர் மது போதையிலிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அவர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலில் கமலுக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை. பின்னர் அவர் வேறொரு காரில் விடுதிக்குப் புறப்பட்டுச் சென்றார். கமல் கார் மீது தாக்குதல் நடத்திய நபர் யார், அவர் எதற்காக இவ்வாறு செய்தார் என்ற விவரங்கள் தெரியவராத நிலையில் இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2021 சட்டமன்றத் தேர்தலில் கமல் முதல்முறையாக போட்டியிடுகிறார். அதோடு முதல்வர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *