வெல்லப்போகிறான் விவசாயி – ஒரே மேடையில் சீமானின் 234 வேட்பாளர்கள்!

politics

கூட்டணிப் பேச்சுவார்த்தை இல்லை, பேரம் இல்லை, அசிங்கப்படுத்திவிட்டார்கள் என்ற கண்ணீரில்லை… வாசலிலேயே காத்துக்கிடக்கும் ஊடகங்களிடம், ‘பேச்சுவார்த்தை சுமுகமாக போய்க் கொண்டிருக்கிறது’ என்று செயற்கை சிரிப்பு வார்த்தைகளைப் பேச வேண்டிய அவசியம் இல்லை.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நேற்று (மார்ச் 7) சென்னையில் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். 117 தொகுதிகளுக்கு ஆண் வேட்பாளர்கள், 117 தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்கள் என்ற ஆண் பெண் சரிசமத்தை நிலைநாட்டியிருக்கிறார். இந்த வேட்பாளர்களில் ஒருவராய் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் இம்முறை போட்டியிடுகிறார் சீமான்.

மொத்த வேட்பாளர்களையும் ஒன்றுசேர அறிமுகப்படுத்தி சென்னையில் நடந்த மிகப்பெரிய கூட்டத்தில் பேசிய சீமான், “அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர். கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர். ஆனால் மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் என்பதே எங்கள் கொள்கை. பெண்களுக்கு 50 சதவிகிதம் கொடுப்பது எங்கள் கடமை.

வரலாறு நமக்கு வழிகாட்டுகிறது, அந்த வரலாற்றைப் பின்பற்றி நாம் மாற்றம் செய்வோம். நாங்கள் விரும்பும் மாற்றத்தை எங்களிடம் இருந்து தொடங்குகிறோம். இது ரத்தம் சிந்தாத அரசியல் போர்.

விவசாயிகள் வாழ்ந்தால் நாடு வாழ்ந்துவிடும். விவசாயிகள் வாழவில்லை என்றால் அந்த நாடு சுடுகாடாக மாறிவிடும். படித்தவர்களும் விவசாயம் செய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். நாம் தமிழர் கட்சி ஆட்சி செய்தால், இப்படியொரு ஆட்சியை நாம் பார்க்கவில்லையே என்று இந்தியா திரும்பி பார்க்கும்.

தேர்தல் அரசியலில் சோரம் பேசும் கட்சிகளுக்கு இடையில் எவ்வித சமரசமும் இல்லாமல் தனித்தே களமிறங்குகிறோம். அரசியலில் அதிகாரம் பெறாத குடிகளுக்கு அரசியல் வாய்ப்பு அளிக்கிறோம். ஆணுக்குப் பெண் சமம் இல்லை, ஆணும் பெண்ணும் சமம் என்ற பாலின சமத்துவத்தை நிலைநாட்டுகிறோம். இது நமக்கான வாய்ப்பு. மாற்று அரசியலுக்காக வீறு நடைபோடும் இந்த இளையோர் கூட்டத்துக்கு நல்லரசியல் மலர்ந்திட வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும். தமிழ் பாரம்பரியத்துக்கு எதிரான அந்நிய ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்தி… நம் மண்ணை மீட்டெடுக்க, நம் மக்களை வாழ வைக்க நாம் தமிழராய் வாருங்கள்” என்று அழைப்பு விடுத்தார் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தைக் குறிக்கும் வகையில் வெல்லப்போறான் விவசாயி என்ற முழக்கத்தைப் பெரும் ஆரவாரத்துக்கு இடையே எழுப்பினார் சீமான்.

**-ஆரா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *