எம்.எல்.ஏ-க்கள் அலுவலகங்களுக்கு சீல்!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, அனைத்து எம்.எல்.ஏ அலுவலகங்களுக்கும் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டசபையின் ஆயுட்காலம் மே மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய அரசை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, எம்.எல்.ஏ.க்களின் அதிகாரமும் முடிவுக்கு வந்துள்ளது.
ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் அவரவர் தொகுதியில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட அலுவலகங்களில் தான் எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களைச் சந்தித்து வந்தனர். தற்போது தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டதால் எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அலுவலகத்திலும் எம்.எல்.ஏ.க்களின் சொந்த பொருட்கள் மற்றும் கோப்புகள் இருந்தால் அவற்றை காலி செய்து அறையை ஒப்படைக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல் மாநகராட்சி பகுதியில் உள்ள சட்டமன்ற அலுவலகங்கள், நகராட்சி கட்டடங்களில் உள்ள சட்டமன்ற அலுவலகங்களையும் காலி செய்து தருமாறு எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் சென்னையில் அரசு சார்பில் வீடுகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் அமைந்துள்ள இந்த வீடுகளையும் திங்கட்கிழமை முதல் பூட்டி சீல் வைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதேபோல ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் பயன்படுத்திய அரசு வாகனங்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்களின் அரசு வாகனங்கள் உள்ளிட்டவை அரசு அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டன.
அரசியல் கட்சி விளம்பரங்கள், கட்-அவுட்கள், சுவரில் வரையப்பட்ட விளம்பரங்கள் என அனைத்தையும் அகற்றும் பணி நடந்து வருகிறது.
வினிதா