�’60 ஆண்டுகள் ஒளிவீசிய சிவப்பு நட்சத்திரம்’:  தா.பாண்டியனுக்கு தலைவர்கள் இரங்கல்!

politics

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 89. இவரது இழப்பு அரசியல் உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுநீரக தொற்று, சிறுநீரக செயலிழப்பு, குறைந்த ரத்த அழுத்தம் ஆகிய உடல்நல பிரச்சனைகளால் தா.பாண்டியன் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் காரணமாக வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது உடல் நிலை மோசமடையவே தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.  எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.58 மணியளவில் உயிரிழந்தார்.

தா. பாண்டியன் இறப்பு குறித்து கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் , “தமிழக அரசியலில் அறுபது ஆண்டுகளைக் கடந்து ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்து விட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர்,  மூத்த தலைவர் தா.பாண்டியனை காலம் பறித்துக் கொண்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள கீழவெள்ளை மலைப்பட்டியில் 18.05.1932ல் தோழர் தா.பாண்டியன் பிறந்தார். அவரது பெற்றோர்கள் இருவருமே ஆசிரியர்கள்.

பத்து வயதிலேயே தேச விடுதலைப் போராட்டத்தின் ஈர்ப்பால், காவல் நிலையம் மீது கல்லெறிந்து தன் எதிர்ப்பைப் பதிவு செய்தவர்.

1948ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட அடக்குமுறை காலத்தில் கைது செய்யப்பட்டவர் தா.பாண்டியன். அதனால் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவரது அண்ணன் தா.செல்லப்பா வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அண்ணனிடமே மார்க்ஸீயம் கற்றதோடு, பள்ளி, கல்லூரிகளில் பயின்று முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1953ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார். தான் படித்த அழகப்பா கல்லூரியிலேயே ஆங்கில விரிவுரையாளரானார். அங்கேயே அவருக்குத் திருமணம் நடந்தது. அவரது மனைவி  ஜாய்ஸ் பாண்டியனும் ஆசிரியர்தான். முதல் இரு பெண் குழந்தைகளும் காரைக்குடியில்தான் பிறந்தன.

1961ல், பேராசான் ஜீவாவின் முன்முயற்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தோற்றுவிக்கப்பட்ட போது, அதன் முதலாவது பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்தப் பணியை நிறைவேற்றுவதற்காக விரிவுரையாளர் வேலையிலிருந்து விலகி, சென்னை வந்தார். சட்டக் கல்லூரியில் மாணவரானார். பிறகு அவரது மனைவியும் குழந்தைகளோடு சென்னை வந்து, பள்ளி ஆசிரியை பணிதேடி அமர்ந்து, குடும்பத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

1962ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். 1964ல் கட்சி பிளவுபடுத்தப்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் நிலைத்து நின்ற தா.பாண்டியன், தொடர்ந்து கட்சியின் மாநிலச் செயற்குழு, தேசியக்குழு, தேசிய நிர்வாகக்குழு ஆகியவற்றுக்கு படிப்படியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டின் சில தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு உள்ளார். வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக 1989 – 90 மற்றும் 1991 – 1996 என ஏழு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அவர் ஒரு சிறந்த தொழிற்சங்கத் தலைவர். ரயில்வே, துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களில் செயல்பட்டிருக்கிறார்.

1991ல் நடந்த பொதுக் கூட்டத்தில் ராஜீவ்காந்தி படுகொலையுண்டபோது, மிகக் கடுமையான காயங்களுக்கு ஆளாகி நீண்ட காலம் மருத்துவமனையிலிருந்து உயிர் பிழைத்தார். அந்தக் குண்டுச் சிதறல்களை வாழ்நாள் முழுவதும் தாங்கியே வலம் வந்தார்.

திருவாரூரில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுக்குப் பின்னர், கட்சியின் மாநிலச் செயலாளராக 2005ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டு, 2015 வரை அப்பொறுப்பில் இருந்தார். தொடர்ந்து தேசியக்குழு உறுப்பினராக இறுதி மூச்சுவரை பணியாற்றினார்.

தமிழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். எதிர்க்கருத்து கொண்டோரையும் பேச்சினால் இழுக்கும் சொல்வளமும், நாவன்மையும் கொண்டவர். தமிழ், ஆங்கில இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றவர். இலக்கியம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, அரசியல் ஆகிய துறைகளில் பரந்த வாசிப்புக் கொண்டவர். இடையறாது படிப்பதும், படித்ததை சுவைகுன்றாமல் எளிதில் புரியும் வகையில் எடுத்துரைப்பதும் அவருக்கு இயல்பாக கைவந்தது.

பேசுவது போன்றே, ஈர்க்கும் எழுத்துவன்மை கொண்டவர்.

முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும், ஜனசக்தியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவர். ஜனசக்தியில் ‘சவுக்கடி’, ‘கடைசிப் பக்கம்’ ஆகிய தலைப்புகளில் அவர் எழுதிய கட்டுரைகள் தீப்பறக்கும் தன்மை கொண்டவை. அதே நேரத்தில் அதனால் தாக்குதலுக்கு உள்ளாபவர்கள் கூட தேடிப்படிக்கும் அளவு மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியவை. ஜனசக்தியின் ஆசிரியராக இறுதி மூச்சுவரை அவர் பணியாற்றியுள்ளார்.

கட்சியின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய போது, கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான ‘பாலன் இல்லத்’துக்கு சென்னை, தி.நகரில் எட்டு அடுக்குகள் கொண்ட கம்பீரமான கட்டிடத்தை பல பிரச்சனைகளுக்கு இடையே கட்டி எழுப்பியது அவரது மறக்க முடியாத வாழ்நாள் சாதனைகளில் ஒன்றாகும்.

இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தின் குரூரமான தாக்குதலுக்கு ஆளானபோது பயனுள்ள எதிர்வினை ஆற்றியவர். தமிழகத்தில் பல்வேறு சக்திகளை ஒன்றிணைத்து காலத்தில் அவர் எடுத்த முயற்சியால், சிங்கள எதிர்ப்பு தமிழர் பாதுகாப்புச் செயல்பாடு மீண்டும் சூடு பிடித்தது.

தமிழகத்தில் பகுத்தறிவு, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, அறிவியலை முன்னிலைப்படுத்துவது, சமூக நீதி ஆகியவற்றுக்காக நேர்கோடாக ஓங்கி ஒலித்த குரல் அவருடையது.  

இந்திய அரசியலை பாசிச சக்திகள் சூழ்ந்து, சாதி, மத பிளவுகளை விரிவுபடுத்தி, மக்களைப் பிரித்து, இந்திய தற்சார்புப் பொருளாதாரத்தை சீரழித்து, தனியார் பெருமுதலாளிகளிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்து வரும் இன்றைய சூழலில், பழுத்த அனுபவமிக்க அரசியல் கூர்மை பெற்ற மூத்த தலைவரான தோழர் தா.பாண்டியனின் மறைவு முற்போக்கு, ஜனநாயக சக்திகளுக்கு பேரிழப்பாகும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது மதிப்புமிக்க, இணையற்ற தலைவரை இழந்து விட்டது” என்று அவரது நினைவலைகளை பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

**தா.பாண்டியனின் கடைசி உரை**

கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் தான் தா. பாண்டியன் இறுதியாக பேசியிருக்கிறார். தான் பிறந்த மதுரையில் இறுதியாக பேசியிருக்கிறார் தா.பாண்டியன்.

வீல் சேரில் அமர்ந்து பேசிய அவர்,  ‘இன்று உட்கார்ந்து பேசுகிறேன், என்னுடைய காலிலும், இடுப்பிலும் எலும்புகள் ஒத்துழைக்கவில்லையே தவிர,  மண்டை ஒழுங்காகத்தான் இன்றும் இருக்கிறது. தமிழ்ச் சமூகத்தை சாகும் வரை என் நாவால் தட்டியெழுப்புவேன். எந்தக் கொம்பனாலும் என்னை அடக்க முடியாது.  மதுரையில் பாடிப் புகழாதவர்கள் இல்லை. முதல், இடை, கடை சங்கம் கண்டது மதுரை’ என மதுரையை புகழ்ந்து பேசினார்.

மேலும்,  ‘வரப்போகும் தேர்தலில் நமது அணி வெற்றிப்பெறப்போகிறது. நம்மை அசைத்து தோற்கடிக்க யாராலும் முடியாது. நமக்கு பல சோதனைகள் வந்திருக்கிறது.  ஆளும்கட்சி மத்திய அரசின் சட்டவிரோத செயல்களுக்கு முட்டுகொடுத்து நாற்காலியை தாங்கி பிடிக்கிறது.  எனக்கு நோய்,  எனவே என்னை தோழர்கள் தாங்கி வந்தார்கள். எடப்பாடிக்கு என்ன நோய், வகுப்புவாதத்துக்கும், பதவிக்கும் தலைவணங்குகிற நோய்.

 தமிழ் மண்ணை நாங்கள் அடிமையாக்க விடமாட்டோம். அதனை நாங்கள் மாற்றி அமைப்போம். தமிழகத்தில் வகுப்புவாதத்தை காலூன்ற விடாமல் முற்றாக முறியடிப்போம், தமிழகத்தில் பாஜக கால் மிதிக்க விடமாட்டோம்” என்று பேசியிருந்தார்.

இந்த சூழலில் தா.பாண்டியனின் மறைவு அவருடைய  கட்சிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசியல் உலகை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

**துணை முதல்வர் பன்னீர் செல்வம்**

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தா.பாண்டியன்  இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

இதுபோன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

**திமுக தலைவர் ஸ்டாலின்**

, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தீவனூர் கிராமத்தில் இன்று காலை ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், தா.பாண்டியனுக்கு மேடையில் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினார். அவருடன் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், இந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் தா.பாண்டியனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

 **தமிழக பாஜக தலைவர்,எல்.முருகன்**

65 ஆண்டுகாலப் பொது வாழ்க்கையில் உழைத்திட்ட தலைவர் தா.பாண்டியன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், இலக்கிய மன்றங்களை அலங்கரித்தவர் எனப் பலதுறை வித்தகராக விளங்கியவர். தா.பாண்டியன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

**டிடிவி தினகரன், அமமுக பொதுச் செயலாளர்**

தா.பாண்டியன் , சிறந்த இடதுசாரி சிந்தனை வாதியாகவும், மக்களை ஈர்த்த பேச்சாளராகவும், கருத்தாழமிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்த பன்முக ஆற்றலாளர். அரசியல் களத்தில் மனதில் பட்டதைத் துணிச்சலாகப் பேசியும், செயல்பட்டும் வந்தவர். கட்சிகளைத் தாண்டி ஜெயலலிதா மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தவர். தனிப்பட்ட முறையில் என்னோடு நட்புடனும் அன்புடனும் பழகியவர். தா.பாண்டியனின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

**தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்**

பொதுவுடைமை இயக்கத்தின் தூண்களில் ஒருவராக விளங்கிய மாபெரும் போராளி தா.பாண்டியனின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழக அரசியலில் மறுக்க முடியாத, மறக்க முடியாத மாபெரும் தலைவராக விளங்கியவர் தா.பாண்டியன். தனது நீண்ட நெடிய வாழ்நாள் பயணத்தில் தமிழக மக்களுக்குச் சேவையாற்றுவதிலேயே கழித்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருந்து சமரசமின்றி சமூக நீதிக்காகவும், சமூகத்திற்காகவும் போராடிய மாபெரும் போராளி தா.பாண்டியன்.

**மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்**

 பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது. பற்பல விழுதுகள் பாய்ச்சிவிட்டு கம்யூனிஸ வேரொன்று வீழ்ந்திருக்கிறது. தோழர் தா.பாண்டியன் மறைவு தமிழர்கள் அனைவருக்குமே பொது இழப்பு

** விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்**

தோழர் தா.பா  மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.  அவரது மறைவு  ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் நேர்ந்த பேரிழப்பாகும். ஈழத் தமிழர்களின் நலன்களில் அக்கறையோடு பணியாற்றியவர். முற்போக்கு சிந்தாந்த தளத்தில் அவரது பங்களிப்பு மகத்தானது.  

**மதிமுக பொதுச்செயலாளர் வைகோ**

கடந்த சில ஆண்டுகளாகவே, உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். கடைசியாக, கடந்த பிப்ரவரி 18ஆம் நாள், மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் எழுச்சி மாநாட்டில் அவர் பேசும்போது, மேடையில் இருந்து கேட்டேன்.

என் கையும் காலும்தான் சரியாக இல்லை; ஆனால், என் மண்டை சரியாகத்தான் இருக்கின்றது; பொது உடைமைக் கொள்கை வென்றே தீரும்; அதற்காக என் மூச்சு இருக்கின்றவரையிலும் முழங்குவேன் என்று அவர் சொன்னபோது, மெய்சிலிர்த்துப் போனேன். அவரது உரை, என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.

அவரது மறைவு, பொது உடைமை இயக்கத்திற்கும், தமிழ்நாட்டின் பொது வாழ்விற்கும், இலக்கிய உலகத்திற்கும், ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். வேதனையில் தவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், கட்சிகளின் எல்லைகளைக் கடந்து அவரை நேசிப்பவர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

**-பிரியா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *