அமைதியாக இருந்துவந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவசரமாக பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுகிறார்.
ஜெயலலிதா தோழியான சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலையாகி பிப்ரவரி 8ஆம் தேதி தமிழகம் திரும்பினார்.
தடபுடலான வரவேற்புகளுடன் சென்னை வந்த சசிகலா கடந்த இரண்டு வாரமாக மௌனமாக இருந்து வருகிறார். ஆனபோதும் தினகரன், விவேக் மற்றும் வழக்கறிஞர்களுடன் மட்டும் முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதித்து வருகிறார்.
அதிமுக – அமமுக இணைப்பு இல்லை, சசிகலாவையும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாகக் கூறிவரும் நிலையில்… தினகரனிடம் அமமுக பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்ட சொல்லியுள்ளார் சசிகலா.
பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா 73ஆவது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு மறுநாள் பிப்ரவரி 25ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுகிறார் தினகரன். ஜூம் மீட்டிங் மூலமாக நடக்க இருக்கும் இந்தப் பொதுக்குழுவில் பத்து மாவட்டத்துக்கு ஒரு சென்டர் எனத் தமிழகம் முழுவதும் பத்து திருமண மண்டபங்களை ஏற்பாடுகள் செய்துவருகிறார்கள் அமமுகவினர்.
பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாகவும் கூட்டணி விஷயம் மற்றும் சசிகலாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்குவது சம்பந்தமாகவும் முடிவுகள் எடுக்கலாம் என்கிறார்கள் அமமுக முக்கிய நிர்வாகிகள்.
**-வணங்காமுடி**
�,