மக்கள் நீதி மய்யத்தின் 4ஆம் ஆண்டு மாநாடு வருகிற பிப்ரவரி 21ஆம்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மார்ச் 7ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீரமைப்போம் தமிழகத்தை எனும் பொருளிலான நமது கட்சியின் மாநில மாநாட்டை பிப்ரவரி 21ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தோம். அதற்கான அனுமதி கேட்டு கடந்த 6ஆம் தேதியே காவல்துறையை அணுகினோம்.
இந்த அறிவிப்பினை எழுதும் நிமிடம் வரை அனுமதி கிடைக்கவில்லை. கோவிட் பெருந்தொற்று காலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடும் நிகழ்வினை மிகுந்த கவனமுடன் ஒருங்கிணைக்க போதிய கால அவகாசம் வேண்டும். காவல்துறை அனுமதி தாமதிக்கப்படுவதால் வேறு வழியின்றி மாநாட்டு நிகழ்வை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மாநாடு ஒத்திவைக்கப்படுகிறதே தவிர நமது கூடுகைகள் தொடர்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழா சென்னை மேற்கு தாம்பரத்தில் அமைந்துள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீலியோ முத்து உள்ளரங்கத்தில் விமரிசையாக நடைபெறும்.
மார்ச் 7ஆம் தேதி ‘சீரமைப்போம் தமிழகத்தை’ மக்கள் நீதி மய்யத்தின் மாபெரும் தேர்தல் மாநாடு வண்டலூர் ஒரகடம் சாலையில் உள்ள மண்ணிவாக்கத்தில் பிரமாண்டமாக நடைபெறும்.
மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் அன்று ‘பெண் சக்தி’ எனும் தலைப்பில் கட்டமைப்பு மற்றும் சார்பணிகளில் உள்ள அனைத்து மகளிரும் ஒன்றுகூடி பெண்மையைப் போற்றும் பெருநிகழ்வு காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அரங்கில் நடைபெறும்.
ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம்” என்றும் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கியுள்ளார்.
**-ராஜ்**�,