சீனா என்ற ஒற்றை வார்த்தையை சொல்லவே பிரதமர் மோடி பயப்படுவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக 3 நாள் சுற்றுப் பயணமாக ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இன்று கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
சின்ன தாராபுரத்தில் பேசிய அவர், அனைத்து இந்திய மக்களும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்பதே எங்களது நோக்கம். ஆனால் இந்தியப் பகுதியைப் பிரதமர் மோடி சீன ராணுவத்துக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது இந்தியப் பகுதியைச் சீன ராணுவம் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆக்கிரமித்திருக்கிறது.
56 இன்ச் அகலம் மார்பு இருப்பதாக கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, சீனா என்ற வார்த்தையைச் சொல்லவே பயப்படுகிறார். சீனாவிடம் பேசத் தைரியம் அற்றவராக இருக்கிறார். கடந்த சில மாதங்களாகச் சீனா என்கிற வார்த்தையை அவர் உச்சரித்ததே கிடையாது.
இந்தியப் பகுதியில் சீனா நுழைந்தபோது அப்படி யாரும் நுழைய வில்லை என்று மோடி கூறினார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் இருப்பதை இந்திய ராணுவ அமைச்சரும், ராணுவமும் ஒப்புக் கொண்டார்கள் என்று குறிப்பிட்டார் ராகுல் காந்தி.
மேலும் இந்திய பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்தியதன் காரணமாகச் சீன ராணுவம் தைரியமாக உள்ளே வந்திருக்கிறது. பிரித்தாளும் சூழ்ச்சியால் தான் சீன ராணுவம் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
அப்போது இந்திய விவசாயத்தை அழிக்கவே பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டார்.
**-பிரியா**�,