அதிமுக பொதுக்குழுவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருக்கமாகவும் உற்சாகமாகவும் பேசினார்.
ஜனவரி 9ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவுக்காக போராடும் முன் வரிசையில் வாளேந்தி நிற்கும் களப் பணியாளர்தான் இந்த எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி,ஆர், அம்மா ஆகியோரின் சாதனைகளுக்கு முன் நான் ஒரு பொருட்டே அல்ல. அவர்களைப் போல் ஆளுமைமிக்கவன் அல்ல. ஆனால், இந்த ஆட்சி தீபாவளிக்குப் போய்விடும், பொங்கலுக்குப் போய்விடும் என்பதையெல்லாம் கடந்து ஆட்சியை நிலைநிறுத்தி, அடுத்தும் அம்மா ஆட்சியை உருவாக்கும் வகையில் உங்கள் முன் நிற்கிறேன்.
இதுவரை செய்யாத கடமைகளை நான் அடுத்த ஆட்சியில் செய்வேன். நம்மை எதிர்த்து எதிரிகளும் துரோகிகளும் நிற்கும் நிலையில்… நமது ஒற்றுமையால் அவர்களைத் தோற்கடிப்போம்.
தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப அணி, பெண்கள் பூத் கமிட்டி முழுமையாக அமைக்க வேண்டும். இதிலே சுமார் 100 குடும்பம் அடங்கிவிடும். ஒரு குடும்பத்தில் மூன்று ஓட்டுகள் என்றால் கூட இந்த அமைப்புகளில் இருந்தே நமக்கு பூத்துக்கு 300 ஓட்டுகள் கிடைக்கும்.
ஒவ்வொரு பூத்துக்கும் 5 குழுக்கள் அமைத்து தேர்தல் பணிகளைச் செயல்படுத்த வேண்டும். நான் இதை அனுபவபூர்வமாகச் சொல்கிறேன். தேர்தல் வியூகத்தை சரியாக அமைத்துவிட்டால் நம் வேட்பாளர் வெற்றிபெறுவது உறுதி.
அண்மையில் பிகார் தேர்தலில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் வித்தியாசமே 12,000 வாக்குகள்தான். ஒவ்வோர் ஓட்டும் எப்படி முக்கியம் என்பதை திருச்செங்கோடு நாடாளுமன்றத் தேர்தலில் நான் அனுபவபூர்வமாக உணர்ந்தவன். அண்ணன் தங்கமணிக்கு இது தெரியும். இன்று விஞ்ஞான யுகம், நவீன யுகம். தமிழ்நாட்டு மக்கள் புத்திசாலிகள். எளிதில் அவர்களிடம் இருந்து வாக்குகளை பெற்றுவிட முடியாது. எனவே திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும்.
தமிழக அரசின் சாதனைகளான மினி கிளினிக், அரசுப் பள்ளி படித்த மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு, அத்திக்கடவு அவினாசி திட்டம், பாதுகாக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள், இரண்டே ஆண்டுகளில் ஆறு புதிய மாவட்டங்கள் என்று பல சாதனைகளைச் செய்திருக்கிறோம். இதையெல்லாம் மக்களிடம் போதிய அளவில் விளம்பரப்படுத்த வேண்டும்” என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி.
**-வேந்தன்**
�,