சொத்துக் குவிப்பு வழக்கில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவின் தண்டனைக் காலம் வரும் பிப்ரவரியுடன் முடிவுக்கு வருகிறது. அபராதத் தொகையான 10.10 கோடி ரூபாயை செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இதனால், பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அபராதத் தொகையை டிடியாக சசிகலா தரப்பு நேற்று தாக்கல் செய்தது. பழனிவேலு என்பவர் பெயரில் ரூ.3.25 கோடி, வசந்தா தேவி பெயரில் ரூ. 3.75 கோடி, ஹேமா பெயரில் ரூ.3 கோடி மற்றும் விவேக் பெயரில் 10,000 ரூபாய் டிடி எடுத்து சமர்ப்பிக்கப்பட்டது. இதனால் சசிகலா முன்கூட்டியே விடுதலையாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவரது தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சசிகலா தரப்பில் அபராதம் செலுத்தினாலும் அடுத்த ஆண்டு ஜனவரி 20க்குப் பிறகே விடுதலை செய்யப்படுவார் என பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி தெரி்வித்துள்ளார். சசிகலாவின் விடுதலை நாள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.
இந்த நிலையில் முன்கூட்டியே விடுதலை தொடர்பான சசிகலாவின் மனநிலை என்னவாக இருக்கிறது என விசாரித்தோம்..முன்கூட்டிய விடுதலைக்காக சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, வெளியே உள்ள கோடிக்கணக்கான நிதி தொடர்பான விஷயங்களில் மத்தியில் ஆளும் பாஜகவின் பெயரில் அழுத்தம் அளிக்கப்படுகிறது. இதனால் முன்கூட்டியே விடுதலையாவதில் சசிகலா பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்படி ஜனவரி இறுதிக்குள் விடுதலையாவது உறுதி. இத்தனை வருடங்கள் சிறையில் இருந்துவிட்டோம்…இன்னும் இரண்டு மாதங்கள்தானே என்ற எண்ணத்தில் அவர் இருக்கிறார் என்கிறார்கள் பெங்களூரு சிறை வட்டாரங்களில்.
**எழில்**�,