�
பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் இன்று (அக்டோபர் 28) காலை தொடங்கியது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் பீகார் சட்டசபை தேர்தலுக்கான மூன்றுகட்ட வாக்கு பதிவில் முதற்கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
இந்தத் தேர்தலில் 114 பெண்கள் உட்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்கு பதிவில் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் உள்ள 6 மந்திரிகளின் அரசியல் எதிர்காலம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
மூன்றுகட்ட வாக்கு பதிவை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய அரசு 30,000 மத்திய பாதுகாப்புப் படை வீரர்களைக் குவித்துள்ளது. மாவோயிஸ்டுகள் அதிகமுள்ள தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. 7 லட்சம் சானிடைசர்கள், 46 லட்சம் மாஸ்குகள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 23 லட்சம் ஜோடி கையுறைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்தத் தேர்தலில் இரண்டு கோடி மக்கள் வாக்களிக்கின்றனர்.
இதுதவிர 80 வயது கடந்த மூத்த குடிமக்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டு நடைமுறையும் உள்ளது. இதன்படி, இன்று 52,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
**-ராஜ்**�,