2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை அடுத்து அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த ஆகஸ்டு 10 ஆம் தேதி காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். சோனியா இடைக்காலத் தலைவராகி இன்றோடு ஒரு வருடம் நிறைவுறும் நிலையில் நேற்று (ஆகஸ்டு 9) இரவு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
நேற்று இரவு ஆன்லைன் ஊடக சந்திப்பை நடத்திய அபிஷேக் மனு சிங்வி,
“காஙகிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் பதவிக்காலம் ‘முடிவுக்கு வருகிறது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை காங்கிரஸ் காரிய கமிட்டி மேற்கொள்ளும். அவர் பதவியேற்ற ஒரு வருடம் கழித்து, ஆனால் அந்த இடம் தானாகவே காலியாகிவிடும் என்று அர்த்தமல்ல சோனியா காந்தி தலைவராகவே இருக்கிறார், முறையான நடைமுறை தொடங்கும் வரை அவர் தொடருவார். ஆனால் அது வெகுதூரத்தில் இல்லை. காங்கிரஸின் சட்டதிட்டங்களின்படி நடக்க கட்சி உறுதிபூண்டுள்ளது” என்றார் சிங்க்வி.
இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், “காங்கிரஸ் கட்சிக்கு முறையான தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று கருத்து வெளியிட்டிருக்கிறார். ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக வேண்டும் என்று கடந்தவாரம் நடந்த காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பிக்கள் கூட்டத்திலேயே இளைஞர்கள் வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் அடுத்த காங்கிரஸ் தலைவர் யார் என்ற கேள்வி கட்சிக்குள் நீடித்து வருகிறது,
**-வேந்தன்**
�,