பாஜகவில் இணையவுள்ளதாக வெளியான தகவலுக்கு சச்சின் பைலட் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் இரண்டாவது முறையாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்துக்கு வராத காரணத்தால் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் சட்டமன்ற குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத சச்சின் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேருக்கும் தகுதி நீக்கம் தொடர்பாக விளக்கம் கேட்டு சபாநாயகர் சி.பி.ஜோஷி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இரண்டு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென நிபந்தனையும் விதித்துள்ளார்.
ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவினாஷ் பாண்டே, “காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததற்காக சச்சின் பைலட் மற்றும் 18 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் 2 நாட்களுக்குள் பதிலளிக்கவில்லை என்றால், அவர்கள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிட்டார்கள் என்றே கருதப்படும்” எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சச்சின் பைலட் இன்று (ஜூலை 15) ஏஎன்ஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “நான் பாஜகவில் இணையப்போவதில்லை” என்ற பதிலைத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸை மீண்டும் ஆட்சியில் அமரவைக்க தான் மிகவும் கடினமாக உழைத்ததாகவும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுத்து வருவதாகவும் பைலட் குறிப்பிட்டுள்ளார். இன்று நடைபெற இருந்த பத்திரிகையாளர் சந்திப்பையும் அவர் ரத்து செய்துள்ளார்.
**எழில்**�,