ஆன்லைன் வகுப்பு தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு, வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வழி கல்வியை ஊக்குவிப்பதாக மத்திய அரசு தெரிவித்த நிலையில், சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.
ஆன்லைன் வகுப்புகளால் தொடர்ந்து லேப் டாப் மற்றும் கணினியை பார்ப்பதன் மூலம் மாணவர்களுக்குக் கண்களில் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதனை தடை செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த நிலையில் கோபிச்செட்டிப் பாளையத்தில் இன்று (ஜூலை 8) செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வரும் 13ஆம் தேதி மூலம் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும். பாடப்புத்தகங்களை வழங்கியவுடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும்” என்று தெரிவித்தார்.
மேலும், “12ஆம் வகுப்பில் இறுதித் தேர்வு எழுதாத 34,482 மாணவர்களில் 718 மாணவர்கள் தேர்வு எழுத ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 718 மாணவர்களுக்கு இன்று மாலைக்குள் தேர்வு தேதியை முதல்வர் அறிவிப்பார். இறுதித் தேர்வு முடிந்தவுடன் 4 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும்” என்றும் அவர் கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டையன், கொரோனா நிலைமை சரியான பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும், ஆகவே பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என்று தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
**எழில்**
�,