ரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா? முதல்வருக்கு கடிதம்!

politics

நெடுஞ்சாலைத் துறை திட்டங்களை நிறுத்திவைக்க வேண்டுமென முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சுமார் ரூ. 10,000 கோடி அளவுக்கு தமிழகம் முழுவதும் டெண்டர் விடுவதற்கு நெடுஞ்சாலைத்துறை அறிவிப்புகளை செய்து பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் திட்டமிடப்பட்டுள்ள டெண்டர்கள் குறித்து பல விமர்சனங்களும், கேள்விகளும் எழும்பியுள்ளன. ஏற்கனவே, சென்னை, உயர்நீதிமன்றத்திலும் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இதனை நிறுத்திவைக்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இதுதொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், “தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் மட்டும் 833 கி.மீ.க்கு ரூ. 1827 கோடி திட்டம் மதிப்பீடு உள்பட டெண்டருக்கான அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில், பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் (பி.பி.எம்.சி.) ஒரு கி.மீ.க்கு ரூ. 2.25 கோடி மதிப்பீடு செலவில் தயார் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் இதே போல பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் (பி.பி.எம்.சி.) திட்டமிடப்பட்ட சாலைகளுக்கு சராரியாக ஒரு கி.மீ.க்கு ரூ. 1.30 கோடி செலவுக்கு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ஒரு கி.மீ.க்கு ரூ. 2.25 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது அதீத மதிப்பீடாக உள்ளது. இதற்கான காரணங்கள் வெளிப்படையாக இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று மிகவும் தீவிரமடைந்து வருவதாகவும், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும், இதை எதிர்த்து ஒரு தீவிரமான போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறிய பாலகிருஷ்ணன், “ஏற்கனவே தமிழக அரசின் நிதி நிலைமை மிகுந்த நெருக்கடியில் உள்ளது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் படி ரூ. 4.53 லட்சம் கோடி மாநிலத்திற்கு கடன் சுமை உள்ளது. நடப்பாண்டு நிதிப்பற்றாக்குறை ரூ. 43 ஆயிரம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு மாநிலத்தின் சொந்த வருவாய் பெருமளவு பாதித்துள்ளது. மாண்புமிகு. முதலமைச்சரின் அறிவிப்பின் படி நடப்பாண்டில் கொரோனாவால் ரூ. 85 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.” என்றும் கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி மாநிலத்தின் வருவாய் குறைந்து வரும் சூழலில் திட்டமிடாத பல செலவுகள் அதிகமாகிக் கொண்டுள்ளன. குறிப்பாக, கொரோனா நோய்த் தொற்றுக்காக மருத்துவம், சுகாதாரப் பணிகளுக்காக பல ஆயிரம் கோடி செலவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் மருத்துவ பணிகளுக்காகவும், நிவாரணப் பணிகளுக்காகவும் தமிழக அரசு ஒதுக்கியுள்ள தொகை மிகச் சொற்பமானதே. அடுத்த பல மாதங்களுக்கு நோய்த் தொற்று மற்றும் மருத்துவ பணிகளுக்காகவும், மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காகவும் மேலும் பல ஆயிரம் கோடிகளை செலவழிக்க வேண்டியுள்ளது. மத்திய அரசும், தமிழக அரசு கோரியுள்ள நிதியினை வழங்கவில்லை. கடன் தொகையைப் பெற்றே தற்போது தமிழக அரசு நிலைமைகளை சமாளித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று மற்றும் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமை கொடுத்து மக்களை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசின் முன் உள்ளது என்று கூறிய பாலகிருஷ்ணன்,

எனவே, சாலைகள், பொதுப்பணித்துறை மற்ற பணிகள் அவசியம் என்ற போதிலும், கொரோனாவை எதிர்த்த பணிக்கு கூடுதல் முன்னுரிமை கொடுக்கும் வகையில், தமிழக அரசு திட்டமிட்டு பணியாற்றுவதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். இத்தகைய சூழ்நிலையில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ. 10,000 கோடிக்கான டெண்டர்களை கோருவதும், அதிலும் மேலே குறிப்பிட்டுள்ள பல விமர்சனங்களும், கேள்விகளும் எழும்பியுள்ள நிலையில் இந்த டெண்டர் அவசியம் தானா என கேள்வி எழுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “.தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறையில் மிகவும் அவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளைத் தவிர இதர பணிகளுக்கான டெண்டர்களை நிறுத்தி வைத்து, அந்த நிதியினை கொரோனா மருத்துவம் மற்றும் மக்களது நிவாரணப் பணிகளுக்கு செலவழிக்க வேண்டும்” என்று பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *