உலகமே தற்போது இந்தியாவை நம்பிக்கையுடன் பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. 1, 90, 535 என்ற எண்ணிக்கையுடன் உலக அளவில் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 7ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது. எனினும், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் மக்கள் தொகைக்கு இந்த பாதிப்பு குறைவுதான் என்றும், உயிரிழப்பு விகிதமும் குறைவாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவிக்கிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள ராஜீவ்காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25ஆவது ஆண்டு வெள்ளி விழா இன்று (மே 1) கொண்டாடப்பட்டது.
வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, “நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கும் பணி வேகவேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், எம்.பி.பி.எஸ்ஸில் 30,000 இடங்களையும், முதுகலை பட்டப்படிப்பில் 15,000 இடங்களையும் புதிதாக உருவாக்கியுள்ளோம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 2 ஆண்டுகளில் சுமார் 1 கோடி பேர் பயனடைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
இந்த இக்கட்டான நேரத்தில் உலகம் நம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் விஞ்ஞான சமூகத்தை நம்பிக்கையுடனும் நன்றியுடனும் பார்ப்பதாகவும், நம்மிடமிருந்து கவனிப்பு, குணப்படுத்துதல் இரண்டையும் உலகம் நாடுகிறது என்றும் குறிப்பிட்ட பிரதமர், “கொரோனா வைரஸ் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருக்கலாம். ஆனால், நம்முடைய மருத்துவப் பணியாளர்கள், முன்கள வீரர்களை வெல்ல முடியாது. இரு தரப்புக்கும் இடையேயான போரில் மருத்துவப் பணியாளர்கள் வெற்றிபெறுவது உறுதி” என்று தெரிவித்தார்.
மேலும், “கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் துணிச்சலான போராட்டத்தின் வேரில் மருத்துவ சமூகம் மற்றும் கொரோனா போர்வீரர்களின் கடின உழைப்பு உள்ளது. முன்கள வீரர்களுக்கு எதிரான வன்முறை, முரட்டுத்தனமான நடத்தை ஏற்கத்தக்கது அல்ல” என்றும் பிரதமர் தெரிவித்தார்.
**எழில்**�,