இன்று ஒரே நாளில் 1,33,000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
தமிழக முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு வரும் ஜூன் 3ஆம் தேதி 97 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. கொரோனா ஊரடங்கால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உதவி வழங்கி கலைஞர் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 1,33,000 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (மே 31) சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் நடைபெற்றது. மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியைத் துவங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் மத்தியப் பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஏற்பாட்டில் கணேசன் நாயக்கர் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30,097 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார். பாலவாக்கம் அண்ணா சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 12,500 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.
பெருங்குடி திருமலை நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10,000 குடும்பங்களுக்கும், காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10,000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை ஸ்டாலின் வழங்கினார். பின்னர், சைதாப்பேட்டை பகுதியில் மடுவின்கரை பிள்ளையார் கோவில் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10,000 குடும்பங்களுக்கு, எம்.ஜி.ஆர் நகரில் 30,000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.மேலும், கலைஞர் நகர் தெற்குப் பகுதியில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா ஏற்பாட்டில் பத்ம சேஷாத்ரி பள்ளி நடைபெற்ற நிகழ்ச்சியில் 20,500 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதுபோல தமிழகம் முழுவதும் பல இடங்களில் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கத் தயாராகி வருகின்றனர்.
**எழில்**
�,”