வெட்டுக்கிளிகள் படையெடுப்பைத் தடுக்க வேண்டுமென ஸ்டாலின், விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளனர்.
வெட்டுக்கிளிகள் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவுக்குத் தற்போது இந்தியா நோக்கி படையெடுத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் தற்போது பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் மாநிலத்தில் அதிகமான அளவில் பரவி உள்ளது. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், பயிர்களை நாசமாக்கிவிட வாய்ப்புள்ளதால் அதை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி- நேரலகிரி கிராமத்திலும், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளிலும் படையெடுத்த வெட்டுக்கிளிகள், அங்குள்ள மக்களைப் பதற்றத்திற்கு ஆட்படுத்தி இருக்கின்றன. எனினும், கிருஷ்ணகிரியில் இருப்பது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி படையில்லை; லோக்கல் வெட்டுக்கிளி தான் என்று நேரில் ஆய்வு செய்த மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மே 30) வெளியிட்ட அறிக்கையில், “பாலைவன வெட்டுக்கிளிகளுக்கும், நமது மண்ணின் தன்மைக்கேற்ற வெட்டுக்கிளிகளுக்கும் வேறுபாடு உண்டு என இயற்கை ஆர்வலர்களும், அறிவியலாளர்களும் தெரிவிக்கிறார்கள்; அதேசமயம், அதன் தாக்கம் குறித்து கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.
தமிழக அரசு, கொரோனாவில் காட்டிய அலட்சியத்தைத் தொடராமல்; வெட்டுக்கிளிகளால் ஏற்படும் இழப்பும் வந்து தம் தலையில் விழுந்துவிடுமோ என்ற பீதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டு விடாமல் தடுக்க தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளத் தொடங்கிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து, பத்தில் ஒரு பங்கு உலக மக்கள் தொகையைப் பட்டினிக்குத் தள்ளும் அளவுக்குத் திறன்பெற்ற வெட்டுக்கிளிகளை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தமிழகத்துக்கு வராது என்று தமிழ்நாடு வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. இருந்தாலும் இவற்றின் இடப்பெயா்ச்சியைச் சரியாக யாராலும் கணிக்க முடியாது” என்று தெரிவித்தார்.
தமிழகம் விவசாய பூமி என்பதை மனதில் கொண்டு வெட்டுக்கிளிகளை தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்துவதற்கான ஆயத்த பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், துறை சாா்ந்த நிபுணா்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
**எழில்**
�,