�இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி இன்று (மே 23) அதிகாலை ஆலந்தூரிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். தாழ்த்தப்பட்டவர்களை அவமதிக்கும் விதமாக பேசியதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாண சுந்தரம் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஆர்.எஸ்.பாரதி அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, உள்ளே செல்ல முயன்ற திமுக வழக்கறிஞர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
விசாரணை முடிந்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் இல்லத்தில் ஆர்.எஸ்.பாரதி ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது, “எனது மகன் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி வருகிறார். மேலும், தனக்கு சளி மற்றும் இருமல் இருப்பதால் கொரோனா பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் ஜூன் 1ஆம் தேதி வரை ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அவர் பேசியது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் இந்த இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
**எழில்**�,