அமைச்சர்களை எடப்பாடி நம்பவில்லையா? மதிக்கவில்லையா?

politics

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர்களுக்கும் இடையே பிளவு நிலவுவதாகவும், முக்கிய அமைச்சர்கள் தாங்கள் அங்கம் வகிக்க வேண்டிய முக்கிய குழுக்களில் புறக்கணிக்கப்படுவதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு (மே 21) அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், மாநகராட்சிகளிலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ள அ.தி.மு.க. அரசு – அந்தப் பகுதிகளில் உள்ள அமைச்சர்களையோ அல்லது மக்கள் பிரதிநிதிகளையோ அந்தக் குழுக்களில் இடம்பெறச் செய்யாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

ஒவ்வொரு பகுதியிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக – ஏற்கனவே அந்தந்தப் பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு மேல், சிறப்பு அதிகாரிகளை நியமித்திருப்பதால் மட்டுமே – கொரோனா நோய் கட்டுக்குள் வந்து விட்டதாகத் தெரியவில்லை. இந்தப் பணியில் அதிகாரிகளுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் பயன்படுத்தினால்தான் சிறப்பாக இருக்கும். உடனடி கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் முடியும். நோய்ப் பாதிப்பின் பீதியில் இருக்கும் மக்களிடம், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களால்தான் நேரடியாக ஆறுதல் கூறி – சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி போன்ற தனி நபர் பாதுகாப்பினைச் செய்து கொள்ள வேண்டும் என்று ஆக்கபூர்வமாக வலியுறுத்தி – போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட முடியும். கொரானோவோடு வாழப் பழகுவோம் என்று அரசு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள நிலையில் – தன் அமைச்சரவை சகாக்கள், மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் இதுபோன்ற பேரிடர் நேரத்தில் கூட முதலமைச்சர் நிர்வாக ரீதியாக வாழப் பழகிக் கொள்ளவில்லை என்பது கவலையளிக்கிறது” என்று கூறியுள்ள ஸ்டாலின், இதற்கு உதாரணங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனா கால முதலீடுகளை ஈர்க்க தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கமிட்டிக்கு தமிழகத்தின் தொழில் துறை அமைச்சர் தலைமை வகித்திருக்க வேண்டும். அதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை விட – அந்தக் குழுவில் அவர் ஒரு உறுப்பினராகக் கூட இடம்பெறவில்லை. பாதிக்கப்பட்டு – நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க, நிதி நிலைமையைச் சீர்படுத்த ஆலோசனைகள் வழங்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் அவர்கள் தலைமையில் ஒரு உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் மாநிலத்தின் நிதியமைச்சர் ஒரு உறுப்பினராகக் கூட இடம்பெறவில்லை. இப்படி கொரோனா தடுப்பு நிபுணர் குழு, ஊரடங்கு தளர்வு பற்றி அறிவிக்கும் குழு எவற்றிலும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கூட இடம்பெறவில்லை!

முதலமைச்சர் பழனிசாமி, தனது அமைச்சர்களுக்குள்ளேயே ஒருங்கிணைப்பு இன்றி – கொரோனா பற்றிய அனைத்தும் எனக்கு மட்டுமே தெரியும் என்பது போல் செயல்படுவது – அமைச்சரவைக்கே உரிய கூட்டுப் பொறுப்பு திட்டமிட்டுத் தட்டிக்கழிக்கப்படுவது, ஆபத்தான போக்காகும்.

இந்நிலையில் கொரோனா நோய்த் தடுப்பில் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்கவும், அதிகரித்து வரும் நோய்த் தொற்றை முறைப்படி தடுக்கவும், எங்கெங்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களோ – அங்கெல்லாம் உள்ள மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒரு கை தட்டினால் ஓசை வராது’ என்பதை முதலமைச்சர் உணர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

இதுகுறித்து அதிமுகவின் மேல் மட்ட வட்டாரங்களில் விசாரித்தோம். “ஸ்டாலின் சொல்வது உண்மைதான் என்பது நடக்கும் நிகழ்வுகளில் இருந்தே தெரிகிறது. மே 16 ஆம் தேதி நடந்த முதலீடுகள் ஈர்ப்புக்கான சிறப்புக் குழுவின் கூட்டத்துக்கு தலைமைச் செயலாளர்தான் தலைமை வகித்தார். தொழில் துறை அமைச்சர் சம்பத் கலந்துகொள்ளவே இல்லை. இதேபோலத்தான் பொருளாதார ஆய்வுக் குழுவில் நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஓ.பன்னீருக்கு நற்பெயர் கிடைத்துவிடப் போகிறதோ என்று எண்ணி அந்தக் குழுவிலும் அவர் இடம்பெறவில்லை. ஆக முதலமைச்சர் தன் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களை விட தலைமைச் செயலாளர் போன்ற அதிகாரிகளைதான் நம்புகிறார். தேர்தலின் போதும் அதிகாரிகளை மட்டுமே அவர் நம்பியிருப்பாரா என்று பார்ப்போம். இதில் அமைச்சர்களின் மீதான நம்பகத்தன்மை மட்டுமல்ல, மரியாதையும் இருக்கிறது. அமைச்சர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பவில்லையா, அல்லது மதிக்கவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது” என்கிறார்கள்.

**-வேந்தன்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *