கொரோனா பெருந்தொற்று, அதனையடுத்து அமல்படுத்தப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு ஆகியவை உள்நாட்டு பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக நடப்பு மற்றும் முந்தைய காலாண்டில் கணிசமான சரிவைச் சந்திப்போம் என நிறுவனங்கள் நினைக்கின்றன. இது வேலை குறைப்புக்கு வழிவகுக்கும் என கொரோனா வைரஸ் ஊரடங்கால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து சிஐஐ (இந்திய தொழில்துறை கூட்டமைப்பு) நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.
இந்த சர்வே, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் 200 முதன்மைச் செயலதிகாரிகளிடம் (சிஇஓ) எடுக்கப்பட்டது. பெரும்பாலான நிறுவனங்கள் நடப்பு காலாண்டு (ஏப்ரல் – ஜூன் 2020) மற்றும் முந்தைய காலாண்டு (ஜனவரி – மார்ச் 2020) தங்களது வருமானம் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சியடையும் என்றும், லாபம் 5 சதவிகிதத்துக்கு அதிகமாகக் குறையும் என்றும் எதிர்பார்ப்பதாக சர்வே முடிவுகள் குறிப்பிடுகின்றன.
மேலும், சுமார் 80 சதவிகித நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகள் தற்போது குடோன்களில் கதியற்று கிடப்பதாகத் தெரிவிக்கின்றன. 40 சதவிகிதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் ஊரடங்கு முடிந்த பிறகு தங்களின் கையிருப்பு விற்பனையே ஒரு மாதத்துக்கு மேல் நீடிக்கும் என்று எதிர்பார்க்கின்றன.
ஊரடங்கு காலத்தில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் துணைப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் பெரும்பாலான நிறுவனங்கள் செயல்பாட்டு தடைகளை எதிர்கொள்கின்றன. தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் பொருட்களைக் கொண்டுசெல்வது ஆகியவை முக்கியத் தடைகளாக உள்ளதாக சிஇஓக்கள் கூறுகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் விநியோகத்தை மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால், அத்தியாவசிய பொருட்களைக் கொண்டுசெல்வதற்குக்கூட உள்ளூர் காவல் துறையினர் குதிரைக் கொம்பாக உள்ளனர்.
**வேலையிழப்பு**
சுமார் 52 சதவிகித நிறுவனங்கள் வேலையிழப்புகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளன. வேலையிழப்புகளின் விகிதம் எப்படியிருக்கும் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை எனினும் கூட 47 சதவிகித நிறுவனங்கள் 15 சதவிகிதத்துக்கும் குறைவான வேலையிழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இதுபற்றி சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி கூறுகையில், “திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழில் துறையின் நடவடிக்கைகள் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து மீண்டுவருவதில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதால், குறிப்பிட்ட அளவுக்கு வாழ்வாதாரம் எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகும். தொழில் துறைக்கு மத்திய அரசு ஒரு நிதித் தொகுப்பை அறிவித்து அதை விரிவாகச் செயல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
**எழில்**�,