பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்!

politics

N

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நடவடிக்கைகளும் முடங்கியுள்ளன. தமிழகத்தில் பள்ளி பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 12 ஆம் வகுப்புத் தேர்வு மட்டும் நிறைவடைந்த நிலையில், 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒரே ஒரு பாடத்துடன் ஒத்திவைக்கப்பட்டது. அதுபோன்று மார்ச் 27ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு தள்ளிப் போனதால், தேர்வு எழுதத் துடித்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கான மாணவச் செல்வங்கள் துவண்டு விட்டனர். துள்ளி விளையாட வேண்டிய இளம் பிஞ்சுகள், ஊரடங்கு உத்தரவால் மன உளைச்சலுக்கு உள்ளாகி முடங்கிக் கிடக்கின்றனர்.

பொதுத்தேர்வு என்ன ஆகுமோ? என்று மாணவர்களின் பெற்றோரும் தவியாய் தவிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மாணவர்களின் கல்வித் திறனை அடுத்தடுத்த 11ஆம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எனவே தமிழக அரசு இந்தக் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *