�
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1965 ஆக உயர்ந்துள்ளது.
200 நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனாவின் மூன்றாவது கட்டம் எனப்படும் சமூகப் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அது 9ஆவது நாளை எட்டியுள்ளது. எனினும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் சுகாதாரத் துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று (ஏப்ரல் 2) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த 12 மணி நேரத்தில் புதிதாக 131 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1965. 1764 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 154 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 50 பேர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 13 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள கேரள மாநிலத்தில் 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 பேர் குணமடைந்துள்ளனர், 2 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 234 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் குணமடைந்துள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேசத்தில் 113, கர்நாடகாவில் 110, தெலங்கானாவில் 96, ராஜஸ்தானில் 108 என கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளது.
**எழில்**
�,