உள் துறை அமைச்சர் பதவியிலிருந்து அமித் ஷாவை நீக்க வேண்டுமென குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் சிஏஏ போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ராஷ்டிரபதிபவனில் இன்று (பிப்ரவரி 27) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் சர்மா உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது, டெல்லி வன்முறை தொடர்பாக காங்கிரஸ் கோரிக்கை மனுவினை குடியரசுத் தலைவரிடம் சோனியா காந்தி சமர்ப்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, “வன்முறையைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுப்பதற்கு பதிலாக மத்திய அரசும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசும் முற்றிலும் மனம் இல்லாத வெறும் பார்வையாளர்களாகவே இருந்துள்ளனர். இந்த வன்முறை 35பேரை பலி கொண்டுள்ளது. திட்டமிடப்பட்ட வன்முறையும், ஒழுங்கமைக்கப்பட்ட கொள்ளையும் டெல்லியில் தடையின்றி தொடர்கின்றன. டெல்லி மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம்” என்று தெரிவித்தார்.
மேலும், “கடமையைச் செய்யத் தவறியதால் அமித் ஷாவை மத்திய உள் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். எங்களது கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துக்கொள்வதாக குடியரசுத் தலைவர் கூறினார்” என்று தெரிவித்தார்.
**த.எழிலரசன்**�,”