�
பாஜக பேரணி செல்லவுள்ள நிலையில், பிரியாணி அண்டாக்களுக்கு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் சிஏஏவுக்கு ஆதரவாக பாஜகவினரும் பேரணிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சிஏஏ போராட்டங்களை கண்டித்து நாளை மாலை 3.30 மணிக்கு பாஜகவின் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் திருப்பூரில் பேரணி நடைபெறுகிறது. சிடிசி காலனியில் தொடங்கி, பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலகம் வரை செல்கிறது.
பேரணி செல்லும் பகுதிகளில் சுமார் 50 பிரியாணி கடைகள் வரை இயங்கி வருகின்றது. இந்த நிலையில் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளனர். “வரும் 29ஆம் தேதி பெரிய கடை வீதி வழியாக பாஜகவினர் பேரணி செல்கின்றனர். அதனால் எங்களது பிரியாணி அண்டாக்களுக்கும், பிரியாணி கடைகளுக்கும் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் இந்து முன்னணி பொறுப்பாளர் சசிக்குமார் கொலைசெய்யப்பட்ட பிறகு, அவரது இறுதி ஊர்வலத்தில் பிரியாணி அண்டா திருடப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருப்பதற்காக அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
**த.எழிலரசன்**
�,”