டெல்லியில் கடந்த மூன்று தினங்களாக, குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பலி எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. காவல்துறையால் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
காவல்துறையினரை உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதிக்காதது ஏன் என்று உச்ச நீதிமன்றமும் கேள்வி எழுப்பியிருந்தது. இதனிடையே இன்று (பிப்ரவரி 26) மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லியைக் காப்பாற்றத் துணை ராணுவப்படையினர் உடனடியாக களமிறக்கப்பட வேண்டும். அதன் பின் தேவைப்பட்டால் ராணுவம் களமிறக்கப்படவேண்டும். டெல்லி கலவரம் பற்றி பிரதமர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் மௌனம் அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
சோனியா காந்தி செய்தியாளர்களைச் சந்தித்த சில நிமிடங்களில் பிரதமர் மோடி, டெல்லி வன்முறை குறித்து ட்வீட் செய்துள்ளார்.
தனது பதிவில், “டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. காவல் துறையினரும், இதர அமைப்புகளும் அமைதி மற்றும் இயல்புநிலையை உறுதிப்படுத்தத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன” என்று கூறியுள்ளார்.
அடுத்த ட்வீட்டில், ”அமைதியும் நல்லிணக்கமும் நமது நெறிமுறைகளுக்கு மையமானவை ஆகும். எல்லா நேரங்களிலும் அமைதியையும் சகோதரத்துவத்தையும் பேணுமாறு எனது சகோதரிகள் சகோதரர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அமைதியாக இருப்பது மிக முக்கியம். அப்போதுதான் இயல்புநிலையை விரைவில் மீட்டெடுக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார் மோடி.
**கவிபிரியா**�,