சட்டமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் இன்று (பிப்ரவரி 24) கொண்டாடப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 7 குழந்தைகளுக்கு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தங்க மோதிரம் அணிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம், தமிழக அரசு கடன் வாங்கி கொள்ளையடித்திருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “தமிழக அரசு கடன் வாங்கி கொள்ளை அடிக்கவில்லை. கடன் வாங்கி மூலதனமாக செயல்படுகிறது. திமுக ஆட்சி போல ஊதாரித்தனமாக செலவிடவில்லை. திமுக ஆட்சியில் வாங்கிய ரூ.1 லட்சம் கோடி கடனுக்கு அரசு வட்டி கட்டி வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். எப்படி ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்று அவர் யோசித்துக்கொண்டிருக்கிறார்” என்று விமர்சித்த ஜெயக்குமார், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான சட்டத்தை எதிர்க்கட்சிகள் வரவேற்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறானது. தமிழக விவசாயிகள் திமுகவையும், திமுக தலைவரையும் தனிமைப்படுத்துவார்கள்” என்றும் சாடினார்.
இந்த ஆண்டு இறுதியிலேயே சட்டமன்றத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அதனை மறுத்த ஜெயக்குமார், “சட்டமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்ற தகவலில் உண்மையில்லை” என்று பதிலளித்துவிட்டுச் சென்றார்.
�,”