rஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல் முறையாக இந்தியா வருகை தந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்றும், நாளை என இரு நாட்களும் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அமெரிக்காவிலிருந்து மனைவி மெலனியா ட்ரம்புடன் நேற்று மாலை அதிபருக்கான சகல வசதிகள் அடங்கிய பிரத்யேக ‘ஏர்போர்ஸ் ஒன்’ விமானத்தில் கிளம்பினார். இன்று காலை சரியாக 11.38 மணிக்கு டிரம்ப்பின் விமானம் குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபபாய் படேல் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
11.56 மணிக்கு மனைவி மெலனியாவுடன் விமானத்தில் இருந்து இந்திய மண்ணில் இறங்கிய ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி வரவேற்றார். இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ட்ரம்பை வரவேற்பதற்காக விமான நிலையப் பகுதியில் இருந்து 30 இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மேடைகளில் கர்பா நடனம் உட்பட இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ட்ரம்ப் செல்லும் சாலைகளின் இருபுறமும் மக்கள் வெள்ளமென காத்திருக்கிறார்கள். ட்ரம்ப், பிரதமர் மோடி இருவரும் தனித் தனி காரில் சபர்மதி ஆசிரமம் நோக்கி சென்றனர். அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வணக்கம் ட்ரம்ப் நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்காக மொரோடோ மைதானத்திற்கு செல்கின்றனர். இதற்காக மொரோடோ மைதானம் முழுவதும் மக்கள் திரண்டுள்ளனர்.�,”