சாத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுப்பிரமணியன் அதிமுகவில் இணைந்தார்.
துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்த விருதுநகர் மேற்கு மாவட்ட அமமுக செயலாளரும், சாத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஜி.சுப்பிரமணியன் அதிமுகவில் இணைந்தார். சுப்பிரமணியனுடன் அவரது மகனும், அமமுக மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளரான விக்னேஷும் அதிமுகவில் இணைந்தார். அப்போது, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடனிருந்தார்.
2016 சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுப்பிரமணியன், அதிமுக அணிகள் பிளவுபட்ட பிறகு தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார். கொறடா பரிந்துரையின்படி சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் இவரும் ஒருவர்.
அமமுக தொடங்கப்பட்ட நேரத்தில் சுப்பிரமணியனுக்கு விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும், மக்களவைத் தேர்தலோடு நடைபெற்ற சாத்தூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் அமமுக சார்பில் களமிறங்கினார். ஆனாலும், அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜவர்மனிடம் தோல்வியைத் தழுவினார்.
அமமுகவில் இருந்து விலகிய விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், சாத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.S.G.சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் திரு.S.G.S.விக்னேஷ் ஆகியோர் சந்தித்து கழகத்தில் இணைந்தனர். #AIADMK pic.twitter.com/dPGnGECh23
— O Panneerselvam (@OfficeOfOPS) February 12, 2020
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் அமமுகவிலிருந்து வெளியேறினர். அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் செந்தில் பாலாஜியை எதிர்த்து அமமுக சார்பில் போட்டியிட்ட சாகுல் ஹமீது, செந்தில் பாலாஜி மூலமாகவே இரண்டு நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் தாய் கழகத்திற்கே மீண்டும் திரும்பியுள்ளார் சுப்பிரமணியன். இது அமமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினகரனுக்கு ஆதரவு அளிக்காமல் அதிமுகவிலேயே இருந்திருந்தால் இந்நேரம் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலாவது சுப்பிரமணியன் தொடர்ந்திருக்கலாம் என்கிறார்கள் அதிமுகவினர்.
�,”