திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நடைபெறும். இதற்கான விருதுகள் பெறுபவர் யார் யார் என்ற பட்டியல் பொங்கல் பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்படும்.
இந்த வகையில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் பட்டியல் இந்த முறை வெளியிடப்பட்டது. இதில் பல விருதுகள் பட்டியலிடப்பட்டபோதும் வழக்கமாக வழங்கப்படும் பெரியார் விருது யாருக்கும் தரப்படவில்லை.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தந்தை பெரியார் விருது யாருக்கு என்பது இந்தாண்டு விருது பட்டியலில் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு, தங்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான பெண்மணி ஒருவருக்கு (வளர்மதி) வழங்கினார்கள். இந்த ஆண்டு சொந்தக் கட்சியிலும் அந்த விருதுக்கு ஆள் இல்லையா அல்லது தங்கள் டெல்லி எஜமானர்களின் மனத்தைக் குளிர்விப்பதற்காக தந்தை பெரியார் விருது தவிர்க்கப்பட்டுள்ளதா… காரணம் என்ன என்பதைத் தமிழக மக்களுக்கு அதிமுக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். தந்தை பெரியார் விருது திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டிருப்பதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
ஸ்டாலின் கருத்து வெளியிட்ட சில மணி நேரங்களில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2019ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறும் செஞ்சி ராமச்சந்திரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி மற்றும் ஒரு சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படும், இந்த விருதுக்குரிய செஞ்சி ராமச்சந்திரனை முதலமைச்சர் தேர்வு செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரியார் விருதை விருதுப் பட்டியலில் இருந்து நீக்கிவிட தமிழக அரசு திட்டமிட்டிருக்க, ஸ்டாலின் வெளியிட்ட உடனடி அறிக்கையால் அந்தத் திட்டம் தகர்த்தப்பட்டதாகச் சொல்கிறார்கள் திமுகவினர்.�,