புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி உறுதியாவதற்கு முன்னரே, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. உறுதியானபோதும் என்.ஆர்.காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே என்னென்ன தொகுதிகள் என்பதில் ஒரு முடிவு எட்டப்படவில்லை. அதிமுகவுக்கோ இன்னும் எத்தனை தொகுதிகள் என்பதே முடிவாகாமல், இழுத்துக்கொண்டே இருக்கிறது. இது முடிவானால்தானே எந்தத் தொகுதி என்பதை முடிவுசெய்யமுடியும்.
இதனால் என். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டும், இன்னின்ன தொகுதிகள் என உறுதியாகாமல் இருப்பதால், அந்தக் கட்சியால் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு மூன்று தொகுதிகள்தான் தருவோம் என பாஜக தரப்பில் கூறிவிட்டதால், புதுவை நிர்வாகிகள் சென்னைக்குச் சென்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரிடமும் பிரச்னையைத் தீர்த்துவைக்குமாறு முறையிட்டிருக்கின்றனர்.
சில நாள்களுக்கு முன்னர் புதுவை அதிமுக மேலிடப் பொறுப்பாளரும் தமிழக தொழில்துறை அமைச்சருமான சம்பத், பாஜக நிர்வாகிகளுடன் பேசியும் பலன் இல்லை.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் சந்தித்த புதுவை அதிமுக நிர்வாகிகள், பாஜக அநியாயமாக தொகுதிகளைக் குறைத்து சொல்கிறார்கள் என அழாதகுறையாக நிலவரத்தை எடுத்துக் கூறினார்கள்.
தொகுதிப்பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில், பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, தேர்தல் பொறுப்பாளர் அர்ஜூன்ராம் மேக்வால் இருவரும் இரண்டு நாள்களுக்கு முன்னர் டெல்லிசென்று, மத்திய அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினர். புதுவை கூட்டணி நிலவரம் குறித்து கலந்துபேசியுள்ளனர்.
அதன் பிறகு, சுரானா புதுவைக்குத் திரும்பிவிட்டார். மேக்வால் நாளைக்கு வருகிறார். அவர் வந்த பிறகு மூன்று தரப்பினரும் உட்கார்ந்து பேசி, விரைவில் சுமுகமான முடிவை எடுக்கலாம் என முடிவாகியுள்ளது என்கிறார்கள், பாஜக நிர்வாகிகள்.
**- வணங்காமுடி**
�,”